நான் பிஷப் ஹீபர் கல்லூரியில் 2007 ஆண்டில்
தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றிய போது 45
அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தமிழக அரசு இயக்குநராகச் செயல்படும் வாய்ப்பு வழங்கியது.
இப்பயிற்சியில் கற்றல், கற்பித்தல்,பாடத்திட்ட வடிமைப்பு, படைப்பாற்றல் ஆகிய களங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்குப் பேராசியர்கள், எழுத்தாளர்கள் பெருந்துணையாக இருந்தார்கள். நான் அனைத்தையும் ஒருங்கிணைத்து அவர்களைத் தனித்துவமாக உருவாகப் பேச்சு, எழுத்துத் திறன்களைக் கற்றுக் கொடுத்தேன்.
அவர்கள் என் வாழ்வில் என்றும் முடியாத நல்ல சீடர்கள்.பயிற்சியின் போது “45 சிறகுகளுடன் ஒரு பறவை”என்னும் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.
இப்பயிற்சியின் ஒரு பகுதியாகக் கல்வி, பண்பாட்டுச் சுற்றுலாவுக்குக் கும்பகோணம் அருகிலுள்ள தாரசுரம் அழைத்துச் சென்றேன்.
இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையின் பொறுப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அப்போது கும்பகோணம், இந்து சமய அறநிலையத்தின் உதவி ஆணையராக இருந்த நண்பர் மா. சுப்பிரமணியம் சிறப்பாகச் செய்திருந்தார். அவர் முதலில் வலஞ்சுழி பிள்ளையார் கோயிலுக்கு அழைத்துச் சென்று அனைவருக்கும் சுவையான மதிய உணவு அளித்தார். பின் தாரசுரம் கோயிலுக்கு அழைத்துச் சென்று சிற்பக்கலை வகுப்பு எடுத்தார்.
தாராசுரத்தில் இருப்பது ஐராவதீசுவரர் திருக்கோயில். இங்குள்ள அன்னை பெரிய நாயகி என்றும் தெய்வநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்.இது யுனஸ்கோ நிறுவனத்தின்
உலகப் புகழ்பெற்ற சிற்ப மரபுச்சின்னமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.இந்தப் பிறவியில் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய சிற்பக்கலையின் சங்கமத் திருக்கோயில்.
இது இரண்டாம் இராசராச சோழனால்(கி.பி 1146-1163) கட்டப்பட்டது.இக்கோயிலைப் பற்றி ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணியில் குறிப்பிட்டுள்ளார். இக்கோயிலின் பெயர் இராசராசேச்சரம். இவ்வூரின் பழைய பெயர் ராசராசபுரம். கல்வெட்டியில் வருவது ராராபுரம் இது காலப்போக்கில் தாராபுரம் என மருவி இப்போது தாராசுரம் என்று மாறியுள்ளது.
இங்கு சிறிய கருங்கற்களில் நுட்பமான சிற்பக்கலையைப் பலர் வடித்துள்ளனர். இங்கு இலக்கியக் காட்சி வடிவங்களையும் காட்சிப் படுத்தியுள்ளனர். சேக்கிழாரின் பெரியபுராணம் படித்த அரசன் 63 நாயன்மார்களின் வடிவங்களை சிற்பக்கலையாகச் செதுக்கியுள்ளார். இங்கு மட்டும் தான் தேவாரப் பதிகம் சிற்பம் வடிவமாக்கப் பட்டுள்ளது.
அதில் திருநாவுக்கரசர் கயிலை செல்லும் காட்சிகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலை விட்டு வெளியில் வர முடியாமல் தமிழரின் சிற்பக்கலை கண்டு வியந்தேன். என் மனதில் இன்றும் நிற்கும் காட்சி இராமயாணச் சிற்பம். இக்கோயில் அருள் பாலிக்கும் என்பதைக்காட்டிலும் கலையும், காவியமும் பேசும் திருக்கோயிலாகும்.
இக்கோயிலை மத்திய, மாநில அரசுகள் ஆவணப்படம் எடுத்துத் தமிழரின் கலைப் பெருமையை இங்கும், எங்கும் பரப்ப வேண்டும். இது ஒரு மானுடத்தின் மகத்தான சாதனையின் சிற்ப வரலாறு.
- முனைவர் பெ. சுபாசு சந்திரபோஸ்