கட்டுரை: ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்
கடற்கரை நகரமான மகாபலிபுரத்தில் பல்லவ மன்னர்களின் கலை நயத்தை விவரிக்கும் சிற்பங்கள் காலங்களைக் கடந்து எழுச்சியுடன் கண்களுக்கு விருந்தாகிறது.
கடற்கரை கோயில், கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து, அர்ஜூனனின் தவம் ஆகிய பிரபலமான சிற்பக் கலை விவரங்களுடன் கூடிய சில அற்புதமான கலை நயத்தை நாம் இங்கே பார்க்கலாம்.
பிரம்மாண்டமான த்ரிவிக்ரம அவதாரம். இப்பொழுதும் பளிச்சென்று, தெளிவாக தெரியும் சித்திரம்.
காளை மாட்டின் மூன்று கால்களும் சுவரில் பதிந்து இருக்க, நான்காவது கால் பதிக்கும் போது கொஞ்சம் இடைவெளி விட்டு வடித்த சித்திரம்.
பால் கறக்கும் போது தன் கன்றுக்குட்டியை வாஞ்சையுடன் தடவிக் கொடுக்கும் சித்திரம். பசுவின் நாக்கு கன்றுக்குட்டியின் உடம்பில் படுதல், கன்றுக்குட்டி தாய்ப்பசுவின் அன்பினால் கட்டுண்டு இருத்தல்,பால் கறப்பவரின் கை சரியான கோணத்தில் வடிக்கப்பட்டு உள்ளவை கலைநயத்தின் ஒரு சிகரம்.
ஒரு குரங்கு குடும்பம். ஒரு குரங்கு மற்றொன்றுக்கு பேன் எடுக்க, குட்டிக்குரங்கு தாயின் மடியில் இளைப்பாறுகிறது.
வாயைப் பிளந்து நிற்கும் சிங்கத்தின் வயிற்றில் ஒரு அழகான சிற்பம். (மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் அருகில்).
யானையின் கம்பீர நடையும், அதன் முன் காலடியில் ஒரு குட்டி யானையும், பின் காலடியில் இன்னொரு குட்டி யானை படுத்துக்கொண்டும், மற்றொரு யானை தன் தும்பிக்கையை வளைத்துக் கொண்டும், அடக்கமாக உட்கார்ந்து இருக்கும் குரங்கும், மயில் போன்ற ஒரு பறவை காட்சியை விவரிக்கும் சித்திரம். பக்கத்தில் உள்ள பாறைகளிலும் சிறிய சிறிய கோடுகளும் சித்திரத்தை அழகாக்குகிறது.
பத்து உறுப்பினர்களைக் கொண்ட யானைக் கூட்டம்.
ஆண் யானை கம்பீரமாக வழி நடத்த, அதன் பாதுகாப்பில் 4 யானைகளும், அதனை தொட்ர்ந்து வரும் பெண் யானை ஆண் யானையின் வாலில் படாதவாறு தன் தும்பிக்கையை உயர்த்தி வைத்தும், தன்னோடு வரும் குட்டிக்காக முன்னங்காலை தூக்கியும், இரு குட்டிகளுடனும் பயணிக்க, தாய் யானயை அவசர அவசரமாக பின் தொடரும் இன்னும் இரண்டு யானைக்குட்டிகள்.
குகையில் இருந்து வெளியில் வரும் விலங்கினங்கள், இளஞ்ஜோடி மான், துள்ளிக்குதிக்கும் மான், இளைப்பாறும் மான், கழுத்தில்லா மூன்று மனிதர்கள், வயதான ரிஷிமுனி, ஒரு சிறிய கோவில், அதில் ஒரு அம்மன், கிழக்குரங்கு, காவலாளிகள், ஆண், பெண்ணின் பலவிதமான நளின அபிநயங்கள் என சித்தரிக்கப்பட்டு இருக்கும் அர்ஜூனன் தவம் உள்ள பாறையின் மற்றொரு பாகம்.
பகவான் கிருஷ்ணர் தன் இடது கையால் கோவர்த்தன மலையை தாங்குவதும், வலது கையால் அன்பர்களுக்கு ஆசீர்வதிப்பதும், பகவானின் லீலையை ஆச்சரியத்துடன் பார்க்கும் ஆயர்க்குல பெண்டிரும், கோபியர்களும், கிருஷ்ணரையே சுற்றித்திரியும் பசுக்கூட்டங்களும் அடங்கிய சித்திரம்.
வார இறுதி (Week-end) நாட்களை இனிமையாக கழிக்க சுற்றுலா செல்லும் நாயகன், நாயகி. நாயகன் முகத்தில் மீசையின் மிடுக்கு, நாயகியின் தோடு, கையில் வளையல், தலையில் சாமானின் சுமை, கையில் சாப்பாட்டு மூட்டை (அருமையாக கனகச்சிதமாக) என பதிக்கப்ப்ட்டு இருக்கும் சித்திரம். சுற்றுலா சென்ற இளஞ்ஜோடி ஆடிப்பாடி மகிழ்கின்றனரோ?. ஆணின் முகத்தில் பெருமையும், பெண்ணின் முகத்தில் நாணமும், அவளை நடனம் ஆட வலியுறுத்தி, அவள் கையை பிடித்து கூப்பிடுவது போலும், (பெண்ணின் மணிக்கட்டை ஆண் பிடிப்பது போலவும், பெண்ணின் கை அபிநயம் பிடிப்பது போலவும் அருமையாக வடித்திருக்கும் சித்திரம்).
பண்டைகால விளையாட்டுகளை தாயக்கட்டை, ஆடு- புலி ஆட்டம் இளம்தலைமுறைக்கு அறிமுக படுத்துவோம். அழகாக, ஒரே அளவில் ஸ்கேல் வைத்து போட்டது போல் மாமல்லபுரத்தில் க்ருஷ்ண மண்டபத்தின் தரையில் இவைகள் பதிக்கப்பட்டுள்ளன.
மேற்கூறை இல்லாத, கடல் காற்றின் அருகிலும், அனைத்து தட்பவெப்ப நிலையையும் தாக்குப்பிடித்தும் கம்பீரமாய் நிற்கும் இத்தகைய பலவிதமான அற்புதமான சிற்பங்களை நம் அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்தி பல்லவ ராஜா காலத்து கட்டிடக் கலையின் சிறப்பை வெளிப்படுத்தும் கடமை நம்மிடம் உள்ளது.
படங்கள் : ஜெயஸ்ரீ சாரி