உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 123வது மலர்க் கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தொடங்கி வைத்தார்.
கோடை விடுமுறைக் காலத்தில், தமிழகத்தில் சுற்றுலா பயணிகளின் முதல் இடத்தைப் பிடிப்பது உதகை. ஊட்டிக்குப் போவதென்றால் சுற்றுலாப் பயணிகளுக்கு அத்தனை குதூகலம். அதுவும் அக்னி நட்சத்திர கத்திரி வெய்யில் வாட்டி எடுக்கும் மற்ற இடங்களில் இருந்து, குளு குளு உதகைக்கு தேடிச் செல்லும் பயணியர் பலர்.
சுற்றுலா பயணிகளின் வருகையை மேலும் சிறப்பாக்கும் வகையில் ஆண்டுதோறும் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி நடைபெறுகிறது. இதனைக் காண குடும்பத்துடன் பயணிகள் திரள்வது வழக்கம். இந்த வருடம், வழக்கம் போல் 123வது மலர்க் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
இன்று மலர்க் கண்காட்சி தொடங்குவதை ஒட்டி, நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்காவில் சுமார் 30 ஆயிரம் மலர் தொட்டிகளில் வளர்க்கப்பட்ட பல வண்ண மலர்கள் காட்சி மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியில் சிறப்பம்சமாக ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் காரனேஷன் மலர்களை கொண்டு நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரித் தோற்றம் அமைக்கப் பட்டுள்ளது. ஆர்க்கிட் மற்றும் காரனேசன் மலர்களை கொண்டு 12 அடி உயர அருவி உருவாக்கப்பட்டுள்ளது பயணியரை பெரிதும் கவர்ந்திருக்கிறது
மேலும், 10 ஆயிரம் லில்லியம், ஆர்டிக் மலர்களை கொண்டு மலர்க் கூடை, கண்ணாடி மாளிகை எதிரே 5 ஆயிரம் மலர்த் தொட்டிகளால் பிரம்மாண்ட மலர் வடிவம் என கண்களுக்கு விருந்தாக அமைக்கப் பட்டுள்ளன.
பூங்காவில் உள்ள மலர்ப் பாத்திகளில் பிரெஞ்சு மெரிகோல்டு, இன்கா மெரிகோல்டு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மலர் ரகங்கள் இடம்பெற்றுள்ளன. வெளிநாடுகளில் பூக்கும் அழகிய மலர்களுடன், நீலகிரியில் பூக்கும் கொய்மலர், ஆர்கிட்ஸ் மலர்களால் ஆன அலங்கார வளைவுகள் காண்போரை கவர்கின்றன.
இன்று தொடங்கியுள்ள இந்த மலர்க் கண்காட்சி வரும் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இறுதி நாளான 21ஆம் தேதி பல்வேறு போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்க உள்ளார்.