குற்றால சீஸன் இப்போது எப்படி இருக்கிறது.. வரலாமா வேண்டாமா என்று கேட்பவர்களுக்கு… நம் பதில் இதுதான்!
சீஸன் தொடங்கியதாகக் கூறப்பட்ட நாள் முதல் இன்று வரை பெரிய அளவில் மழை இல்லை. ஆனால், வானம் மேக மூட்டத்துடன் லேசான தூறல், மற்றும் சாரல் குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் இருக்கிறது.
குற்றால அருவிக்கு நீர் வரத்து அளிக்கும் மழை நீர் பிடிப்புப் பகுதிகளான மலைப் பகுதியில் மழையில்லை. எனவே அருவிகளில் தண்ணீர் குறைவாகவே விழுகிறது. குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் வரிசை கட்டி நிற்கின்றனர். பெண்கள் பகுதியில் இரு நாட்களுக்கு முன்பு வரை தண்ணீர் அறவே விழாமல் இருந்தது. ஆனால் கடந்த இரு நாட்களாக சிறிதளவு தண்ணீர் விழுகிறது.
குறைவாகவே தண்ணீர் விழுந்தாலும், ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருப்பதால், சரியாக குளிக்க இயலவில்லை என்று பலரும் விரக்தியை வெளிப்படுத்துகின்றனர். மழையில்லாமல் குளங்களில் தண்ணீர் இல்லை என்பதால், படகுக் குழாம் மூடிக் கிடக்கிறது!
அருவிகளில் தண்ணீர் இல்லாவிட்டாலும், இதமான காற்று, லேசான சாரல், அதிகம் வெயில் இல்லாமை என சூழல் இருப்பதால், சுற்றுலா பயணிகள் அவற்றை ரசிக்கின்றனர்.