வாஷிங்டன்: அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பஹாமாஸில் டோரியன் புயல் கரையை கடந்தது.. தற்போது அமெரிக்கா நோக்கி அந்த புயல் செல்கிறது.
கரீபியன் தீவுகளுக்கு அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் சக்தி வாய்ந்த புயல் உருவானது. இந்த புயலுக்கு டோரியன் என பெயரிடப்பட்டது. இந்த புயல் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பஹாமாஸ் தீவை திங்கள்கிழமை தாக்கும் என அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் அறிவுறுத்தியது.
இதையடுத்து பஹாமாஸை தீவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காற்றின் வேகம், மழை வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லாமல் இருக்க மணல் மூட்டைகளை மக்கள் வைத்திருந்தனர்.
இந்த புயலானது நேற்று முன் தினம் வடக்கு பஹாமாஸ் அருகே அபாகோ தீவில் உள்ள எல்போகே பகுதியில் கரையை கடந்தது. பின்னர் நேற்று காலை பஹாமாஸ் தீவுகளை புயல் கடுமையாக தாக்கியது. புயலின்போது மணிக்கு 295கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
புயலின் வேகத்தால் மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. கடல் கொந்தளிப்பால் அலைகள் ஆர்ப்பரித்தன. கனமழையால் சாலையில் 3 அடிக்கு தண்ணீர் உயர்ந்திருந்தது. புயலுக்கு இதுவரை 5 பேர் பலியாகினர் என தெரிகிறது.
அது போல் பொருட்சேதமும் அதிகமாகவே இருந்தன. இந்த புயல் தற்போது கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அபாகோ தீவுகளில் 8வயது சிறுவன் வெள்ள நீரில் மூழ்கி பலியானான். மற்றொரு சிறுமி காணாமல் போனதாக கூறப்படுகிறது.
அதிபயங்கர டொரியன் புயல் அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதி நோக்கி புயல் நகர்ந்து செல்கிறது. முன் எச்சரிக்கையாக புளோரிடா உள்பட 3 மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
டொரியன் புயல் பேரழிவை ஏற்படுத்தி உயிருக்கே உலை வைக்கும் என்று மியாமிலுள்ள தேசிய புயல் எச்சரிக்கை மைய அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். வீடுகளை விட்டு வெளியேறாமல் இருப்பவர்கள் தேவையான உணவுகள், குடிநீர் போன்றவற்றை சில நாட்களுக்கு சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
முன்எச்சரிக்கையாக புளோரிடாவுக்கு செல்ல இருந்த விமானங்கள், அங்கிருந்த வர இருந்த விமானங்கள் என 900க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
புயல் தாக்கியதால், பஹாமாஸ், அபேகோஸ் உள்ளிட்ட தீவுகள் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. பஹாமாஸிலுள்ள 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. புயல் காரணமாக பல மீட்டர் உயரத்துக்கு எழுந்த அலைகளால், அபேகோஸ் தீவிலுள்ள கிணறுகளில் கடல்நீர் புகுந்துவிட்டது.
புயல் காரணமாக மற்ற தீவுகளில் ஏற்பட்ட சேத விவரங்கள் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. எனினும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் நிவாரணப் பணிகளுக்காக 2.52 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.81 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரணப் பொருள்களைக் கொண்ட 30 வாகனங்களும் பஹாமாஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் டோரியன் புயல் மிகக் கொடூரமாக உள்ளது. இதனால் அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதி மிகவும் பாதிக்கப்படும் என கூறியுள்ளார். முன்னதாக கடந்த 1992-ஆம் ஆண்டு ஒரு புயல் தாக்கியது. அப்போது 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது,