ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்புக்கு எதிரான அமெரிக்காவின் பிரசாரத்தை ஆதரிப்பதற்கு பதிலாக பாகிஸ்தான் நடுநிலை என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும் என்று பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இம்ரான் கான் அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொள்வதற்கும், யு.என்.ஜி.ஏ-வில் உரையாற்றுவதற்குமான சில நாட்களுக்கு முன்னதாக அவரின் இந்தக் கருத்து வெளிவந்திருக்கிறது.
“இந்தக் குழுக்களில் சேருவது எங்களுக்கு எதிராக மாறியதால் பாகிஸ்தான் நடுநிலை வகித்திருக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்” என்று இம்ரான் கான் ஒரு சர்வதேச தொலைக்காட்சி அமைப்பான ரஷ்யா டுடேவிடம் கூறினார்.
அமெரிக்க கடற்படையினர் கடந்த இருபதாண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தலிபானுக்கு எதிரான போரை நடத்தி வருகின்றனர்.
“இதனால் நாங்கள் 70,000 பேரை இழந்தோம், பொருளாதாரம் என்று பார்க்கப் போனால்… நூறு பில்லியன் டாலர்களை இழந்தோம். இறுதியில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்கள் வெற்றிபெறவில்லை என்று நாங்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளோம். இது பாகிஸ்தான் மீது வைக்கும் நியாயமற்ற குற்றச்சாட்டு என்று நான் உணர்ந்தேன்” என இம்ரான் கான் கூறினார்.
பாகிஸ்தான் மண்ணில் பிறந்து ஆப்கானிஸ்தானில் ‘ஜிஹாத்’ நடத்துவதற்காக அமெரிக்காவால் நிதி உதவி அளிக்கப்பட்ட பயங்கரவாத குழுக்கள், இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளன என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போரில் பங்கேற்பது, அதன் சொந்த மக்களை இழக்க வழிவகுத்ததுடன் பொருளாதாரத்தில் ஒரு நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது! என்று கூறியுள்ளார்.
இம்ரான் கானின் இந்தக் கருத்துக்கள் அவரது அமெரிக்க பயணத்துக்கு சில நாட்களுக்கு முன்னதாக வெளி வந்துள்ளன! இம்ரான் அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பை இரண்டு முறை சந்திக்கிறார். மேலும் இந்த மாத இறுதியில் ஐ.நா பொதுச் சபையிலும் (யு.என்.ஜி.ஏ) உரையாற்றுகிறார்.
முன்னதாக, ஜூலை மாதம் தனது முதல் அமெரிக்க பயணத்தின் போது, இம்ரான் கான் இதேபோன்ற ஒரு கருத்தை வெளிப் படுத்தியிருந்தார். தனது நாட்டில் இன்னும் 30,000 முதல் 40,000 போராளிகள் உள்ளனர் “அவர்கள் ஆப்கானிஸ்தான் அல்லது காஷ்மீரின் சில பகுதிகளில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் போராடியவர்கள்.” என்று குறிப்பிட்டார்.
தனது தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தங்கள் மண்ணில் செயல்படும் போர்க் குழுக்களை நிராயுதபாணி ஆக்குவதற்கான “அரசியல் விருப்பம்” முன்னிருந்த அரசுகளுக்கு இருந்ததில்லை என்று இம்ரான் கூறியிருந்தார்.
ஆப்கனில் பயங்கரவாதம் வேர்கொள்ள பாகிஸ்தானின் நடவடிக்கையே காரணம் என்றும்,காஷ்மீரில் பயங்கரவாதக் குழுக்களை கட்டவிழ்த்து விட பாகிஸ்தானே காரணம் என்றும் கூறப்படும் உலகளாவிய குற்றச்சாட்டை இம்ரான் கான் ஒப்புக் கொண்டிருப்பதாகவே அவரது இந்தப் பேச்சை உலகம் வர்ணிக்கிறது.