கொரோனா வைரஸின் பிடியில் சிக்கியுள்ள சீனாவில் 500க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்கள் தவித்துக் கொண்டிருந்தாலும், அவர்களை மீட்டுக் கொண்டு வரும் எந்த முயற்சியிலும் பாகிஸ்தான் அரசு ஈடுபடவில்லை.
“வாழ்வோ சாவோ எல்லாம் அல்லாவின் கையில்தான் உள்ளது. எங்கள் நாட்டு மாணவர்களை நாங்கள் அழைத்துவரப் போவதில்லை” என்று பாகிஸ்தான் அரசே தெரிவித்து விட்டது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு சுகாதார ஆலோசகர் ஜாஃபர் மிஸ்ரா கூறியதாவது:
“எங்கள் பாகிஸ்தானியர்களின் நலன் எங்களுக்கு முக்கியம். நாடு மற்றும் உலகம் ஆகியவற்றின் நன்மை கருதியே சீனாவிலிருந்து பாகிஸ்தானியர்களை மீட்க நடவடிக்கை எடுக்காமலிருக்கிறோம்.
உலக சுகாதார அமைப்பு இதைத்தான் சொல்கிறது. இதுவே சீனா மற்றும் பாகிஸ்தானின் கொள்கையும் கூட.
சீனாவுடன் எங்கள் ஒற்றுமையை இவ்வாறு வெளிப்படுத்துகிறோம். கொரோனா வைரஸை சீன அரசு அவர்களுடைய வூஹான் நகரிலேயே கட்டுப்படுத்தியுள்ளது.
பொறுப்பில்லாமல் ஒருவேளை நாங்கள் எங்கள் நாட்டினரை வூஹானிலிருந்து அழைத்துவந்தால், பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவிவிடும்.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சீன அரசு எடுக்கும் போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் உள்ள பாகிஸ்தானியரையும் ஒரே குடும்பமாகக் கருதி அக்கரை காட்டுகிறது. ஆனால், கொரோனா வைரஸ் பரவும் தன்மை கொண்டது. இது உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கும் நேரமல்ல.”
இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜாஃபர் மிஸ்ரா.
சீனாவில் உள்ள தங்கள் நாட்டு மக்களையும் மாணவர்களையும் மீட்டுக் கொண்டுவருவதில் பல்வேறு நாட்டு மக்களும் பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வரும் நிலையில், தங்கள் நாட்டு மாணவர்களை மீட்டுக் கொண்டுவரப் போவதில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது உலக மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 213 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 10,000 பேர் இவ்வைரஸால் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.