ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் அதிகாரபூர்வமாக விலகியிருக்கிறது. இதனை பிரிட்டன் மக்கள் சுதந்திர தினம் எனக் கூறி வீதிகளில் கூடி கொண்டாடி வருகின்றனர்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்று வெகு நாட்களாக அந்நாட்டு மக்கள் கோரி வந்தனர். இது குறித்து கடந்த 2016 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடந்தது. இதில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என பெரும்பாலான மக்கள் வாக்களித்தனர். இருப்பினும் இதனை நிறைவேற்றுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இடையே அரசியல் மாற்றங்களும், ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. டேவிட் கேமரூன், தெரசா மே ஆகியோர் பிரதமர் பதவியில் இருந்து விலகினர்.
பின்னர் பிரதமரான போரிஸ் ஜான்சன், தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் முடிவை தற்போது நிறைவேற்றியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகினாலும், அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள 11 மாதங்கள் ஆகும். எனவே, டிச.31ஆம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் முழுமையாக விலகிவிடும். இதனால் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 73 பிரிட்டன் எம்.பி.,க்கள் பதவி இழப்பர்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியதை பிரிட்டன் மக்கள் வரவேற்று வீதிகளில் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். லண்டன் தெருக்களில் திரண்ட அவர்கள், தேசியக் கொடியை ஏந்தியும், சுதந்திரம் கிடைத்து விட்டதாகவும் முழக்கங்களை எழுப்பினர்.