இலங்கையில் நல்லூர்க் கந்தனுக்கு 286ஆவது நெற்கதிர் அறுவடை செய்து அமுதுப் படையல் வழங்கும் விழா நடைபெற்றது. தைப்பூச நிகழ்வை முன்னிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் நெற்கதிர் அறுவடை விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கந்தனுக்கு உகந்தது தைப்பூசம். உலகெங்கும் வாழும் தமிழ் ஹிந்துக்கள் தைப்பூசத்தை பேருவகையுடன் விழா எடுத்துக் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், தைப்பூசத் திருநாளின் முதல் நாள் நெற்கதிர் அறுவடை விழா கொண்டாடப் படுகிறது. இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள வயலுக்குச் சென்றனர்.
அங்கே வயலில் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மரபாகக் கொண்டாடப் படும் பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நெற்கதிர் எடுக்கும் விழா 286ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டது இலங்கையில் தமிழ் மரபுகளின் தொன்மையை மறவாமல் எடுத்தியம்பும் விழாக்களில் ஒன்றாகவே தைப்பூசமும் நெற்கதிர் அறுப்பும் அமுதுப் படையலும் கருதப் படுகிறது.