மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. ஆம் மங்கை ஒரு கங்கை வீரத்தில் வேங்கை ஆணின் வெற்றிகளில் அவள் ஆற்ற்யிருக்கு பாங்கை எடுத்து இயம்ப முடியாது.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் அவ்வாறு மட்டுமல்லாது இன்று பல்துறைகளிலும் சாதனை படைக்கும் சரித்திரம் அவள்
படிப்பில் மதிப்பெண் பட்டியலில் தேர்ச்சியில் மருத்துவத்தில் விளையாட்டுத்துறையில் அறிவியலில் வானவியலில் சந்திரனுக்கு செல்வது முதல் அனைத்திலும் முதன்மையானவள் பெண்.
வீட்டையையும் நிர்வகித்து அலுவல்களுக்கு சென்று நாட்டு நலன்களிலும் பங்கு கொண்டு சமூக தொண்டு புரிந்து, என்று பன்முகதிறமைசாலியாக, தசாவதானியாக விளங்குகிறாள்
சாதனை உயரத்தை எட்டி உள்ள மகளிர் சமுதாயத்திற்கு என்று ஒரு நாள் உலகெங்கும் ஒருங்கே கொண்டாடப்படுகிறது என்றால் அது தான் உலக மகளிர் தினம்.
மகளிர் தினம் தோன்றிய வரலாறு
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றது அந்த காலம். ஆனால் கல் உடைக்கும் வேலையில் இருந்து கணினி துறை வரை அனைத்து துறைகளிலும் இன்றைக்கு மைல்கல்லாக மகளிர் விளங்கும் அளவுக்கு சாதனை படைத்து உயர்ந்துள்ளனர் என்றால் மிகையில்லை.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி அன்று இந்த மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை விடப்படுகிறது.
ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிடலாம். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். வீட்டுவேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.
1857-ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பெண்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது.
ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர்.
அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர். 1857-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன்பிறகு 1907-ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராட தொடங்கினர். 1910-ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்டு தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் மாதம் 8-ந் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.
1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.
இதையடுத்து 1921-ம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண் டாடப்பட்டு வருகிறது. 1975-ம் ஆண்டு முதல் தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்திற்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த சாதனை நன்னாளில் மகளிரின் முன்னேற்றத்திற்கு நாமும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
தாயாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக தோழியாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான்.
ஒருவரின் சொந்த நாடு மொழி ஆகியன, தாய் நாடு தாய்மொழி என்றுதான் அழைக்கப்படுகிறது. இதேபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள் தான் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இன்றைய உலகில் பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவது மறுக்க முடியாத உண்மையாகும். ஆண்களை எட்டுவது சிரமம் என்ற நிலையிலிருந்து முன்னேறி ஒவ்வொரு துறையிலும் பெண்கள் ஆண்களுக்கு கடுமையான போட்டியைத் தந்து வருகிறார்கள்.
பெண்கள் என்றாலே ஆசிரியர் அல்லது செவிலியர் வேலைக்குத் தான் என்ற கூற்றெல்லாம் தற்போது மாறிவிட்டது. ஆகாய விமானம் ஓட்டுவது, ரயில் இன்ஜின்களை இயக்குவது, அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவது, கணினித் துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்துவது என்று பெண்கள் முத்திரை பதிக்காத துறையே இல்லை. அறிவியல் முதல் ஆன்மீகம் வரை அனைத்திலும் அவள்.
பெண்களைப் போற்றும் விதத்தில் உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு நாளை ஒருவருக்கொருவர் வாழ்த்து செய்திகளையும் முகநூல், வாட்ஸஅப், டிவிட்டர் என பல வழிகளில் பரிமாறிக் கொள்கின்றனர். ஆண்களும் தங்கள் பிரியமானவர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துக் கூறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகிற்காக பல தியாகங்களை மேற்கொள்ளும் பெண், குடும்பத்திற்காக மெழுகாய் எரியும் பெண், அவள் போற்றுதலுக்கு உடையவள். அவள் உணர்வுகளை மதியுங்கள். அவளை ஒரு போகப் பொருளாய் கருதி அவளுக்கு எதிராக நடைப்பெறும் சமுதாய சீர்கேடுகள் அகல வேண்டும். உறுதி கொள்ளுங்கள் ஆண்களே. இதுவே நீங்கள் பெண்களுக்கு செய்யும் மரியாதை.