கொரோனா அச்சம் காரணமாக தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்த நண்பனை சக நண்பன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். இந்தியாவிலும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளிலையே பொழுதை போக்கி வருகின்றனர்.
இந்நிலையில், நொய்டாவில் உள்ள தயாநகர் என்ற இடத்தில் 24 வயது ப்ரவீஷ் என்பவர் தனது நண்பர்கள் உடன் நேற்றிரவு வீட்டில் செல்போனில் கேம் விளையாடியுள்ளார். அப்போது ப்ரவீஷ் தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது சக நண்பரான ஜெய்வீர் என்பவர் ப்ரவீஷ் மீது கோப்படைந்து திட்டவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் ஜெய்வீர் தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து ப்ரவீஷ் இன் காலில் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ப்ரவீஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஜெய்வீர் உள்பட சம்பவ இடத்தில் இருந்தவர்களை தேடி வருகின்றனர்.