கடந்த 3 வாரங்களாக வெளி உலகுக்கு பல்வேறு யூகங்களை வளர்த்துக் கொடுத்துக் கொண்டிருந்த வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், 20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் தோன்றினார் வடகொரியா அதிபர் கிம் உன். உரத் தொழிற்சாலை துவக்க விழாவில் பங்கேற்று சிகப்பு ரிப்பன் வெட்டினார்.
இதய பாதிப்பால் மரணப் படுக்கையில் உள்ளார் என்றும், அவர் உயிரிழந்துவிட்டார் அவரது இறுதிச் சடங்குக்கு வடகொரியா தயாராகிறது என்றும் பல்வேறு செய்திகள் உலா வந்த நிலையில், நேற்று திடீரென ஒரு பொது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதாக ஒரு செய்தி புகைப்படங்களுடன் வெளியானது
கிம் ஜங் உன்னின் தாத்தாவும் வடகொரியாவை நிறுவியவருமான கிம் இல் சுங்கின் பிறந்தநாள் விழா ஏப்.15ஆம் தேதி சூரியனின் நாள் என்ற பெயரில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும். இந்த விழாவில் வடகொரிய அதிபர் உள்பட உயர் அதிகாரிகள் பங்கேற்பது வழக்கம்.
கடந்த 2011ஆம் ஆண்டில் பதவியேற்றதில் இருந்து தொடர்ந்து இந்த விழாவில் கலந்து கொண்ட கிம் ஜாங் உன் முதல் முறையாக இதில் பங்கேற்காமல் போனது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது இதனால் அவரது உடல்நலம் குறித்து அமெரிக்க, சீனா உள்ளிட்ட உளவு அமைப்புகளும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின.
இந்நிலையில் அண்டை நாடான தென்கொரியாவின் இணைய இதழான டெய்லி என்.கே., ஏப்.12ஆம் தேதி கிம் ஜாங் உன்னிற்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது என்றும் அதிகளவு புகைப்பிடித்தல், உடல்பருமன் மற்றும் அதிக வேலை காரணமாக கிம்முக்கு இதய பாதிப்பு ஏற்பட்டது என்றும் கூறியது. மேலும் இதய அறுவை சிகிச்சையின் போது மருத்துவருக்கு கை நடுக்கம் ஏற்பட்டதால், அவரது உடல் நிலை மோசமாக உள்ளது என்று செய்திகள் வெளியாயின. கிம் உன் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்றும் செய்திகள் உலா வந்தன.
இந்நிலையில் தன்னைப் பற்றி வரும் யூகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, நேற்று கிம் ஜாங் உன் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் ஓர் உரத் தொழிற்சாலை திறப்பு விழாவில் தனது சகோதரியுடன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியுள்ளார் கிம் ஜான் உன். இதனை மத்திய கொரியன் செய்தி ஏஜென்சி புகைப்படங்களுடன் செய்தியாக வெளியிட்டுள்ளது.