சிங்கப்பூர் நாடாளுமன்றம்: எதிர்க் கட்சித் தலைவர் பிரிதாம்சிங்!
தேவையோ, தேவை இல்லையோ சிங்கப்பூருக்கு இப்போது ஒரு எதிர்க் கட்சித் தலைவர் உருவாகிவிட்டார். பத்து உறுப்பினர்கள் வென்ற பாட்டாளிக் கட்சியின் தலைவருக்கு அப் பதவி அளிக்கப்பட்டிருகிறது. இதனை அதிகார பூர்வமாக அறிவித்தவர் நம் பிரதமர் லீ அவர்கள்.
இதற்கு முன் பொத்தோங் பாசிர் தொகுதி உறுப்பினர் தியாம் சீ டோங் இப் பதவியை ஏற்றிருந்தார். ஆனால் அது அதிகார பூர்வமானதாகக் கருதப்படவில்லை. ஒரு எதிர்க் கட்சித் தலைவருக்கான ஊதியம், அலுவலக இடம், மற்ற வசதிகள் தரப்படாததால், அடுத்து 6 உறுப்பினர்களைப் பெற்றிருந்த பாட்டாளி கட்சியும் , நாடாளுமன்றத்தில் அதிகார பூரவமற்ற எதிர்க் கட்சித் தலைவராகவே இருந்தது.. அப்போது அக் கட்சியின் தலைவர் லோ தியா கியாங். ஆவார்.
இவர்களைத் தவிர எதிர்க் கட்சித் தலைவர் பதவியை முன்பே அனுபவித்த ஒருவர் நம்மிடையே வாழ்ந்து சென்றிருக்கிறார். அவர் சிங்கப்பூரின் நவீன சிற்பி மறைந்த லீ குவான் யூ ஆவார். 1955ல் சிங்கையின் அரசியலில் அடி எடுத்து வைத்த ஆரம்ப காலத்தில், அன்றைய சட்ட மன்றத்தில் முதல் எதிர்க் கட்சித் தலைவராகவும் வழி காட்டியவர் அமரர் லீ.
இன்று பாட்டாளிக் கட்சியின் தலைவர் பிரீத்தம் சிங், எதிர்க் கட்சித் தலைவரின் அந்தஸ்தை ஏற்கிறார். வரவேற்கிறோம். அவருக்கு ஆளும் கட்சிக்கு அறிவுரை கூறும் நிழல் அமைச்சரவை அமைக்கும் அளவுக்கு அதிகாரம் உண்டு எனச் சொல்லப்படுகிறது.. ஒவ்வோரு அமைச்சுக்கும் ஒரு நிழல் அமைச்சை மறைமுகமாக நடத்தி ஆலோசனைகள் கூறுவது எதிர்க் கட்சிகளின் மரபாக அமையும்.
16 அமைச்சர்களைக் கொண்ட இன்றைய மசெக அரசுக்குப் போதுமான நிழல் அமைச்சு அமைக்க 10 உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட பாட்டாளிக் கட்சிக்குப் போதாது என்பது உண்மை. ஆனாலும் அதற்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படுவது அவசியம் தான்.
கடுமையான எதிர்காலத்தை எதிர்கொள்ளவிருக்கும் அரசுக்கு வெறும் எதிர்ப்பை மட்டும் வாயளவில் தெரிவிக்காமல், அரிய ஆலோசனைகளைத் தரும் வாய்ப்பினை எதிர்க் கட்சிகளுக்குத் தர வேண்டும்.
- ஏபிஆர். (சிங்கபூர்)