நேபாள எல்லையில், சீன ஆக்கிரமிப்பு குறித்து செய்திக் கட்டுரை எழுதிய நேபாள பத்திரிகையாளர் பால்ராம் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்
கோர்கா மாவட்டத்தில் ருய் கிராமத்தில் சீன அத்துமீறல் குறித்து கட்டுரை எழுதிய நேபாள பத்திரிகையாளர் பல்ராம் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாண்டுவில் உள்ள நீர் மின் திட்ட பகுதிக்கு அருகிலுள்ள பாகமதி ஆற்றின் கரையில் பலராம் பனியா என அடையாளம் காணப்பட்ட 50 வயது பத்திரிகையாளரின் உடல் கண்டெடுக்கப் பட்டதாக ‘ஹிமாலயன் டைம்ஸ்’, மக்வான்பூரில் உள்ள மாவட்ட காவல் அலுவலக (டிபிஓ) செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி தகவல் வெளியிட்டுள்ளது.
பிம்பேடியில் உள்ள காவல் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு குழு அவரது உடலை ஆற்றில் இருந்து வெளியே கொண்டுவந்து ஹெட்டாடா மருத்துவமனைக்கு அனுப்பியது. பலியா கடைசியாக பால்கூ ஆற்றின் கரையில் நடந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இருப்பிடம், அவரது மொபைல் ஃபோனின் படி, அதையே காட்டியது! ஆனால் அதன் பிறகு தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் இவர் காணாமல் போனதாக ஒரு புகாரை போலீசில் அளித்திருந்தனர், அதைத் தொடர்ந்து அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக ஒரு குழு அமைக்கப் பட்டதாக ‘காத்மாண்டு போஸ்ட்’ தெரிவித்துள்ளது.
“அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக பெறப்பட்ட விண்ணப்பத்தின் படி, அவரது புகைப்படமும் இருந்தது. கண்டுபிடிக்கப்பட்ட உடல் பத்திரிகையாளர் பனியாவின் உடல் என்று சரிபார்க்கப்பட்டது,” என டிபிஓ தெரிவித்துள்ளது.
காத்மாண்டு போஸ்ட் செய்தியின் படி, பனியா நேபாள நாளிதழான காந்திபூர் டெய்லியுடன் தொடர்பில் இருந்தார். அவர் அரசியல், நாடாளுமன்றத்தை உள்ளடக்கிய ஆட்சி மற்றும் அதிகாரத்துவம் குறித்த விரிவான செய்திகளை அளித்து வந்துள்ளார்.
கோர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ருய் கிராமத்தில் சீன ஆக்கிரமிப்பை எடுத்துக்காட்டி அவர் ஒரு கட்டுரை எழுதியதாகக் கூறப்படுகிறது. ஜூன் மாதத்தில், பல்வேறு ஊடகங்களிலும், சீனா நேபாள கிராமத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதன் இணைப்பை சட்டபூர்வமாக்குவதற்காக எல்லை போஸ்ட்களை அகற்றியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ருய் கிராமத்தைத் தவிர, நேபாளம் முழுவதும் 11 இடங்களில் சீனா நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. சீனாவின் எல்லையான நேபாளத்தின் நான்கு மாவட்டங்களில் சுமார் 36 ஹெக்டேர் நிலம் சட்டவிரோதமாக சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நேபாள வெளியுறவு அமைச்சகம் (மோஃபா) கடந்த மாதம் எல்லைப் பிரச்னைகள் மற்றும் சீனாவின் சில பிரதேசங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது தொடர்பான ஊடக செய்திகள் தவறானவை என்றும், இந்த விஷயம் அதன் அதிகார எல்லைக்குள் வராது என்றும் கூறியது.
இமயமலையில் இந்திய பிராந்தியங்களான கலபாணி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியவற்றை நேபாளம் சர்ச்சைக்குரிய புதிய அரசியல் வரைபடத்தில் இடம்பெறச் செய்த பின்னர் இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் அதிருப்தி ஏற்பட்டுள்ள சூழலில், சீன ஆக்கிரமிப்பு குறித்து கட்டுரை எழுதியவரின் மரணம் நிகழ்ந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.