சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் பிரதமரும் அதனைக் கட்டமைத்தவருமான லீ குவான் யூ தனது 91 ஆவது வயதில் மரணம் அடைந்தார். இதனை அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. சிங்கப்பூரை நிறுவியவர் லீ குவான் யூ. ஆங்கிலேயர்களிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தவர். சிங்கப்பூர் குடியரசின் நிறுவனரான, சிங்கப்பூரின் தந்தையான இவர், 1959ல் இருந்து 1990 வரை ஆட்சி செய்து, சிங்கப்பூர் என்ற சிறிய தீவை உலகின் முன்னணி பொருளாதார, வர்த்தக மையமாக மாற்ற வைத்தவர். அண்மையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த லீ குவான் யூ சில வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக, பிரதமர் லீ ஸியென் லூங் முன்னதாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார். லீ குவான் யூவுக்காக, நூற்றுக்கணக்கான மக்கள் மலர்களை வைத்து நாட்டின் முதலாவது பிரதமரின் உடல்நலனுக்காக பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில் லீ குவான் யூ சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 3.18 க்கு அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லீ குவான் யூவின் மறைவுக்கு சிங்கப்பூர் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலக நாடுகளின் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.