பமாகோ, மாலி: செவ்வாய்க்கிழமை நேற்று, மாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இதில் மருத்துவர்கள் 7 குழந்தைகள் பிறக்கும் என்று கூறியிருந்ததும், 9 குழந்தைகள் பிறந்ததும் ஆச்சரியமாகப் பார்க்கப் படுகிறது.
மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் ஹலிமா சிஸ்ஸின். 25 வயதான இவர் கர்ப்பம் தரித்தார். இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இவரது கர்ப்பப் பையில் ஏழு குழந்தைகள் இருப்பதாகக் கணித்தனர். ஹலிமா சிஸ்ஸுக்கு சிறப்பு கவனிப்பு தேவை எனக் கூறியதையடுத்து ஹலிமா சிஸ் மொராக்கோவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அங்கே மருத்துவர்களின் சிறப்பு கண்காணிப்பில் சிஸ்ஸுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தன. மொராக்கோ மற்றும் மாலியில் நடத்தப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில், சிஸ் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சிஸ் நேற்று சிசேரியன் மூலம் ஐந்து பெண் மற்றும் நான்கு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஒன்பது குழந்தைகளும் தாயும் நலமாக இருப்பதாக மாலியின் சுகாதார அமைச்சர் பாண்டா சிபி தெரிவித்துள்ளார்.
ஒன்பது குழந்தைகள் பிறப்பது என்பது, மிக மிக அரிதான ஒன்று. இவ்வாறு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் போது, அவற்றில் சில குழந்தைகள் முழு வளர்ச்சி அடையாமல் போகும்.. என்கின்றனர் மருத்துவர்கள்.