இஸ்லாமிய கருத்துகளை பரப்பி வருவதாகக் கூறப்படும் தப்ளிகி ஜமாத் அமைப்பு, பயங்கரவாதத்தின் வாசலாக இருப்பதாகக் கூறி தடை விதித்துள்ளது சௌதி அரேபிய அரசு.
பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்று தப்ளிகி ஜமாத் என்று, அந்த அமைப்புக்கு பொருளாதார உதவிகளைச் செய்து வந்த சௌதி அரேபிய அரசே குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகெங்கும் பல நாடுகளில் பரவியிருக்கும் தப்ளிகி ஜமாத் அமைப்புக்கு பெருமளவில் நிதியுதவி சௌதி அரேபியா நாடுகளில் இருந்துதான் வருகிறது. எல்லாவற்றிலும் சௌதி அரேபியாவைப் பின்பற்றும் மற்ற இஸ்லாமிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள், இப்போது என்ன செய்யப்போகின்றன, அங்குள்ள தப்ளிக் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது.
சௌதி அரேபிய அரசின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சகம், ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “டாக்டர் அப்துல் லத்தீப் அல் அல்ஷேக், மசூதிகளில் உள்ள போதனை செய்பவர்களுக்கும், மசூதிகளுக்கும் பிறப்பித்த உத்தரவில், வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, அல் அஹ்பாப் எனப்படும் தப்ளிக் மற்றும் தவா குழுவுடன் மக்கள் பழகுவதை எச்சரியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
சமூகத்துக்கு தப்ளிகி ஜமாத்தால் ஆபத்து இருப்தால், மசூதிகள் மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். தவறான வழிகாட்டல், தடம் மாறுதல், ஆபத்து போன்றவை இந்தக் குழுவால் இருக்கிறது. பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்றாக இக்குழு இருக்கிறது. சமூகத்துக்கு ஆபத்தான குழுவாக இருப்பதால், தப்ளிக் தவா குழுவை சௌதி அரசு தடை செய்கிறது என்றும் சௌதி அரசு தெரிவித்துள்ளது.
இஸ்லாத்தில் சன்னி பிரிவைச் சேர்ந்த அமைப்பு தப்ளிக் ஜமாத் அமைப்பு! இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இயங்கி வருகிறது. பழமைவாதத்தை பின்பற்றும் இந்த பிரிவினர் பல நாடுகளிலும் பரவி உள்ளனர்.
சௌதி அரேபியா வழங்கி வரும் நிதியிலிருந்து இந்த அமைப்பு செயல்பட்டு வருவதால் இந்தத் தடை உத்தரவு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் நீண்ட காலமாக இந்த அமைப்பினர் இயங்கி வருகின்றனர். கடந்த வருடம் கோவிட் பரவல் தீவிரமாக இருந்த போது தில்லியில் இந்த அமைப்பினர் நடத்திய மாநாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது.