அமெரிக்காவின் பிலாடெல்ஃபியா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் அமெரிக்காவின் தொடக்கப்பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட மொத்தம் 21 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக்கி வைத்துக் கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என அமெரிக்காவின் பல பகுதிகளிலும் கோரிக்கைகள் எழுந்தன. இந்த சூழலில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
நேற்று அமெரிக்காவின் பிலாடெல்ஃபியா பகுதியில் துப்பாக்கியுடன் பலர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மக்கள் கூட்டம் மிகுதியான இடத்தில் நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலில் 3 பேர் பலியாகினர். மேலும், 11 பேர் காயமடைந்தனர். இதனை காவல் துறை உறுதி செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி டிஎஃப்.பேஸ் கூறியிருப்பதாவது, “ இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலை பலர் ஒன்றாக இணைந்து மக்கள் கூட்டத்தின் நடுவே நிகழ்த்தியுள்ளனர். வழக்கம் போல் மக்கள் தங்களது வார இறுதி நாட்களில் கூடியிருந்த போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது அதிகாரிகள் பதில் தாக்குதல் மேற்கொண்டனர். இருப்பினும், தாக்குதல் நடத்தியவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து சரியாக தெரியவில்லை” என்றார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் காவல் துறை சார்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த சிசிடி காட்சிகளைப் பெற்று விசாரணை நடத்த காவல் துறை முடிவு செய்துள்ளது.
