பிரேசிலில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் லூலா இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பிரேசில் நாட்டின் முன்னால் அதிபரும் தொழிலாளர் கட்சியின் முன்னால் தலைவருமான லூலா ஊழல் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ளார். மிக நீண்ட சட்ட போராட்டத்தின் முடிவில், அதிபர் தேர்தலில் போட்டியிட லூலா தகுதியில்லாதவர் என்று அந்நாட்டின் நீதிமன்றம் கடந்த மாதம் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஆணையிட்டது.
மேலும் 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டது.இந்நிலையில் லூலா தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார். லூலாவை விடுதலை செய்ய வேண்டுமென 5 மாதங்களாக சிறைக்கு வெளியே முகாமிட்டுள்ள அவருடைய ஆதரவாளர்களுக்கு அவரின் இந்த முடிவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 7ம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்றும் இந்த தேர்தலில் தனக்கு பதிலாக பெர்னான்டோ அட்டாட் அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என்றும் லூலா தான் எழுதிய கடிதத்தில் அறிவித்திருந்தார்.
லூலாவின் சட்டக்குழுவும், தொழிலாளர் கட்சியும் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு இன்னும் வழங்கப்பட வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.