இந்தியா – பாகிஸ்தான் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதற்றம் அதிகரித்தது. போர் மூளுமோ என அஞ்சும் அளவுக்கு இரு நாடுகளின் மோதல் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில், பாகிஸ்தான் தனது வான் எல்லையை கடந்த புதன் கிழமை மூடியது.
இதனால், வான்வழி பயணங்கள் மேற்கொள்ள முடியாததால், ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் முழுவதும் வான்பரப்பு விமான போக்குவரத்துக்காக திறக்கப் பட்டுள்ளதாக சிவில் போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் பாகிஸ்தான் வான்பரப்பு விமான போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது.
அது போல், கடந்த வியாழக்கிழமை நிறுத்தப் பட்ட சம்ஜௌதா விரைவு ரயில், இன்று மீண்டும் லாகூரில் இருந்து புறப்பட்டது.
சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் திங்கள் கிழமை இன்று 150 பயணிகளுடன் லாகூரில் இருந்து புறப்பட்டதாக ரேடியோ பாகிஸ்தான் தெரிவித்தது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் திங்கள், வியாழன் இரு நாட்கள் இயக்கப் படுகிறது.
இரு நாடுகளுக்கு இடையே நிலவிய பதற்ற நிலை காரணமாக இது நிறுத்தப் பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் அது தனது பயணத்தை தொடங்கியுள்ளது.