அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியில் வாட்டர்புரியைச் சேர்ந்த நபர், 62 வருடங்கள் மனைவியுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு இப்பொழுது தன் 84ஆவது வயதில் விவாகரத்து வழக்கை எதிர்நோக்கி இருக்கிறார்!
காரணம் 62 வருடங்கள் மனைவியை சமாளித்தவர் ஒருகட்டத்தில் மாட்டிக்கொண்டதுதான்! அவர் செய்த செயல் பெரிய அளவில் அப்படி ஒன்றும் இல்லைதான்! மனைவி சொல்லே மந்திரம் என்று நம்மூரில் தலையாட்டிக் கொண்டு குடும்பத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் எத்தனையோ ஆண்களை விட ஒரு படி மேலே போய்… மனைவி சொல்வதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளக்கூடாது என்ற அளவுக்குச் சென்றவர்.
கடந்த 62 வருடங்களாக தனக்கு காது கேட்காது என்று நடித்ததுதான் அவர் செய்த குற்றம்! மனைவியின் டார்ச்சர் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் அவர் இவ்வாறு நடிக்கத் தொடங்கி 62 வருடங்கள் ஓட்டியுள்ளார் என்பது ஆச்சரியமான தகவல்
84 வயதான பாரி டவ்சன் தனது 80 வயது மனைவி டோரத்தியுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் காலத்தை ஓட்டி உள்ளார் என்பது மிகப் பெரும் ஆச்சரியம்தான்!
டோரத்தி, தனது கணவருக்கு தகவல்களை பரிமாற ஒரு கட்டத்தில் சைகை மொழியை பயன்படுத்த தொடங்கினார் அதற்காக இரண்டு வருடம் செலவழித்து தன் கணவருக்கு புரியும் வகையில் சைகைகளால் பேசத் தொடங்கினார்! இதுகுறித்து அவர் கூறியபோது அவருடன் பேசுவதற்கு நான் என் கைகளால் சைகைகளை பயன்படுத்த தொடங்கினேன் அது சரியான பொழுது அடுத்த பிரச்சனை ஏற்பட்டது; அது அந்த சைகைகளை பார்த்து உணரும் ஆற்றல் இல்லாமல் பார்வைக் குறைபாடு என்று கூறத் தொடங்கினார்! ஆனால் இப்போது எல்லாமே ஏமாற்று தான் என்று புரிந்து கொண்டேன் என்று கூறுகிறார்!
இந்தத் தம்பதிக்கு 6 வாரிசுகள் 13 பேரன் பேத்திகள் உள்ளனர்! அவர்கள் எல்லோருமே பாரி டவ்சன் காது கேளாதவர் என்றே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்! வீட்டில் இருக்கும் போதெல்லாம் எனக்கு காது கேளாதவர் போலவே இருக்க தொடங்குவார். ஆனால் ஒருமுறை யுடியூப் வீடியோவில் அவர் மிக அழகாக கரோக்கி இசையை கேட்டுக் கொண்டே அதற்கு ஏற்றவாறு பாடியதைக் கேட்க நேர்ந்தது. இரவு விடுதியில் ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர் பாடியது யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது! அதைப் பார்த்த பொழுது தான் இவர் இதுவரை நடித்து வந்துள்ளார் என்று எனக்கு தெரிந்தது
இதை அடுத்து டோரத்தி தன் கணவர் மீது விவாகரத்து நோட்டீஸ் கொடுத்து உள்ளார் ஆனால் டவ்சனின் வழக்கறிஞர் ராபர்ட் தனது கட்சிக்காரர் மீதான புகார் குறித்து சொல்லும் போது, அவர் காது கேட்க இயலாதவர் என்று நடித்தார்! காரணம் அவருடைய மனைவிக்காக மட்டுமே! இது வேறு எவரையும் ஏமாற்றுவது ஆகாது!
காரணம் தனது மனைவியை ஏமாற்றுவதற்காக அவர் அவ்வாறு செய்யவில்லை! இவர் மிகவும் அமைதியானவர், அதிகம் பேசுவதற்கு விரும்பாதவர்! ஆனால் அவரது மனைவியோ லொட லொட என்று எப்போதும் என்று கத்திக் கொண்டே இருப்பவர். எப்பொழுதுமே அதிகாரம் செய்யும் தோரணையில் இருப்பவர். அவரிடம் இருந்து தன்னையும் தன் மனதையும் காப்பாற்றிக்கொள்ள, தொடக்கத்தில் அவர் தனக்கு காது கேட்காதது போல் நடிக்கத் தொடங்கினார்.
அதன் பின்னர் இதுதான் சரியான வழி என்று அவர் தீர்மானித்தார். அவர் மட்டும் இவ்வாறு செய்யாமல் போயிருந்தால் அறுபது வருடங்களுக்கு முன்னமேயே இவர்களுக்குள் விவாகரத்து நடந்திருக்கும்.
தனது குழந்தைகளுக்கும் குடும்பத்திற்குமாக அவர் இந்த தியாகத்தைச் செய்துள்ளார்! இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள் இவர்களது வெற்றிகரமான வாழ்க்கை ஏன் 62 வருடங்கள் தொடர்ந்து வந்திருக்கிறது என்பதை! என்று வேறு கூறியிருக்கிறார்.!
News Source: World news Daily Report
ஆனால், இந்தச் செய்தி ஒரு கட்டுக்கதை என்று இன்னொரு செய்தித் தளம் கூறியுள்ளது.
கனடா நாட்டைச் சேர்ந்த பொழுதுபோக்கு இணையதளம் ஒன்று, இது போன்ற நகைச்சுவை, கிண்டல் கேலி செய்திகளையும், குற்றச் சம்பவங்களையும் கண்டறிந்து வெளியிடும் என்றும் அந்தத் தளத்தில் 2019 மார்ச் 4ம் தேதி வெளியான செய்தியில் இந்தக் கதை புனைகதையாகத் தோன்றாத அளவுக்கு புனையப் பட்டதாகவும் கூறுகிறது இந்த இணையதளம்.
உண்மையில், திருமணமாகி 67 வருடங்களுக்குப் பின்னர் இவர்கள் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்கள். பிரபலமான ரியல் எஸ்டேட்காரரான மொகுல் பர்டான் ஹாண்டெல்ச்மென்னின் மனைவி லூசில்லி ஹாண்டெல்ஸ்மென் விவாகரத்து வழக்கு தொடுத்தார். தங்களால் இனி சேர்ந்திருக்க முடியாது என்று சொன்னார். அதற்கு, தெற்கு புளோரிடாவின் பிரபல ரியல் எஸ்டேட் வர்த்தகப் பெண்மணி ஜனே ராங்கின் (60 வயது) மீதான தனது கணவரின் காதல்தான் காரணம் என்றார்.
ஆனால், இந்தச் சம்பவத்தை இந்த இணையதளம் அழகாகப் புனைந்து, தங்கள் தளத்தின் புனைகதைத் தன்மையையும் டிஸ்க்ளெய்மரில் போட்டு, இதை வெளியிட்டிருக்கிறார்கள்.
என்னவோ போங்க… உண்மையில் இந்த மனிதர் அப்படியே நடித்திருந்தாலும், குடும்பம் நன்றாகத்தான் இருந்திருக்கும் என்றுதானே நமக்குத் தோன்றுகிறது!