இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தொடர் குண்டு வெடிப்புகளுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. மேலும், தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்திய அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இலங்கையில் திங்கள்கிழமை இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டுள்ளது. இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன இதனை அறிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஏசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளான நேற்று இலங்கையில் சர்ச்சுகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக 3 நபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அமைச்சரவை செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரத்ன கூறுகையில்… உள்நாட்டில் உள்ள நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உளவுத்துறை எச்சரித்தும் போதிய பாதுகாப்பு செய்யாதது அரசின் குறைபாடு. இந்த குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கிறது. இந்த சதி இல்லாமல் இவ்வளவு பெரிய குண்டுவெடிப்பு நடத்த முடியாது என்றார்.
இது போல் அதிபர் மைத்ரீபால சிறீசேனா வெளியிட்டுள்ள அறிக்கையில்… இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது. முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப் படுகிறது. நாட்டின் தற்போதைய நிலையில் முப்படை வீரர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. நாளை தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப் படுகிறது என்று கூறியிருந்தார்.
இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு உள்ளூர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள்தான் காரணம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய அனைவரும் இலங்கை நாட்டவர்கள்தான் என்று கூறியுள்ளது அரசு.
இவ்வாறே, குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்களே என்று கூறிய அதிபர் சிறீசேனவும், உள்ளூர் இஸ்லாமிய அமைப்புகளை கடுமையாக சாடியுள்ளார்.