சீனத் தலைநகர் பீஜிங்கில் ஹலால் உணவகங்களில் எழுதப்பட்டுள்ள அரபு மொழியிலான வாசகங்கள் மற்றும் இஸ்லாமிய அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது!
சீனத் தலைநகர் பீஜிங் நகரில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹலால் உணவகங்கள் உள்ளன.
சீனாவில் இரண்டு கோடி இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். இஸ்லாமியர் களால் நடத்தப்படும் உணவகங்கள் மற்றும் உணவு சப்ளை செய்யும் கடைகளில் அரபு மொழி வார்த்தைகளும் இஸ்லாமிய சின்னங்களும் இடம்பெற்றுள்ளன.
சீனாவில் அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டாலும் கம்யூனிஸ்ட் கொள்கைகளை அரசு ஆதரித்து வருகிறது.
இந்நிலையில் ஹலால் உணவகங்களில் அரபு மொழி எழுத்துக்கள் மற்றும் இஸ்லாமிய சின்னங்களை அகற்ற வேண்டும் என்று சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது இது சீனாவில் வாழும் இஸ்லாமியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அதிகாரிகள் இது குறித்துக் கூறுகையில், அரபு மொழி- அந்நிய மொழி! இது அந்நிய கலாச்சாரம்! சீன கலாச்சாரம் சிறுபான்மை ஆக்கப் பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது… என்றும் கூறியுள்ளனர்
இஸ்லாமியர்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களுக்கும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது. பல தேவாலயங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.
மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சீனர்கள் கெடுக்கப்படுவதாகவும் சீன கலாச்சாரம் அழிக்கப்பட்டு வருவதாகவும் அரசு கருதுகிறது. எனவே இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது!
ரெஸ்டாரண்டுகள், கஃபேக்கள், உணவகங்கள் உள்ளிட்டவை ஹலால் முத்திரையிடப்பட்ட பெயரில் இருந்தால் அவற்றை மறைக்கத் தொடங்கியுள்ளன. இது போல் ஹலால் வாசகங்களுடன் இருக்கும் உணவகங்களின் அரபுப் பெயர்கள் மறைக்கப் பட்டு வருகின்றன. அதுபோல், இஸ்லாம் தொடர்பான படங்கள் ஏதாவது குறிப்பிடப் பட்டிருந்தாலும், அந்த பெயர்ப்பலகைகளும் மறைக்கப் பட்டு அல்லது அகற்றப் பட்டு வருகின்றன.
இது போன்ற நடவடிக்கை கடந்த 2016ம் ஆண்டு முதலே நடந்து வருவதாகக் கூறப் படுகிறது. சீனாவில் உள்ள 2 கோடி முஸ்லிம்களும் சீன கலாசாரத்துடன் சீனாவின் பெரும்பான்மையினருடன் கலந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.
இருப்பினும் இதற்கு சீனாவின் இஸாமியர்கள் அதிகம் உள்ள ஜின்ஜியான் மாகாணத்தில் எதிர்ப்பு எழுந்தது. அங்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் போடப்பட்டு, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. இங்கே உள்ள உய்குர் முஸ்லிம் சமுதாயம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களில் சுமார் 20 லட்சம் பேர் மறு கல்வி முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.