ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: கார்த்தி முன்ஜாமீன் மனு; அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு!

karthick chidambaram

புது தில்லி: ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில், முன் ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனிடையே  இந்த ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன் மூலம் அவரும் அவரது நிறுவனமும் பலன் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரித்து வருகிறது. மேலும், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நிறுவனத்தின் ரூ.1.16 கோடி மதிப்பிலான முதலீடு மற்றும் வங்கி இருப்பை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு தற்காலிகமாக முடக்கியது. இது குறித்து பிஎம்எல்ஏ தீர்ப்பாயம் ஆய்வு நடத்தியது.
ஏர்செல்-மேக்சிஸ் நிதி நிறுவன முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பிருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சட்ட விரோத பணப் பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது. ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் கார்த்தி சிதம்பரம் பயனடைந்ததற்கான ஆதாரம் இருப்பதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் இயங்கும் தீர்ப்பாய அதிகாரி அதிகாரி துஷார் விஷா உத்தரவில் கூறிஉள்ளார்.

இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தரப்பில் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் பல்வேறு நீதிமன்றங்களில் பல மனுக்களை இந்த விவகாரத்தில் கார்த்தி போட்டு இழுத்தடிப்பதாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் எனவே ஜாமீன் கொடுக்கக் கூடாது என்றும் அமலாக்கத்துறை  கடும் ஆட்சேபம் தெரிவித்தது. தில்லி பாடியாலா வளாக நீதிமன்றம் இந்த விவகாரத்தில்  சனிக்கிழமை இன்று மதியம் 3 மணிக்கு உத்தரவை வழங்குவதாகக் கூறியுள்ளது.