![]()
நடிகர் ஜெய் தற்போது வலியவன், புகழ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் புகழ் படத்தை மணிமாறன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே என்எச்4 என்ற படத்தை இயக்கியவர். பிலிம் டிபார்ட்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சுஷாந்த் பிரசாத் படத்தை தயாரித்து வருகிறார். ஒரு தயாரிப்பாளர் தன் படத்தில் நடிக்கும் கதாநாயகனை பாராட்டுவது அரிதாகி வரும் இந்தக் காலகட்டத்தில் சுஷாந்த் பிரசாத், படத்துக்கு ஜெய் தரும் ஒத்துழைப்பைப் பாராட்டி மாய்ந்துதான் போகிறார். ‘ஜெய்யின் நல்ல கதைக்கான தேடல், நேரம் தவறாமை, எளிமை ஆகியவை என்னை மிகவும் கவர்ந்த குணங்கள். அவர் தயாரிபாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ‘வடகறி’ படத்தை தொடர்ந்து நாங்கள் அவரோடு இணைவது இது இரண்டாவது படம். வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்ற ‘வடகறி’ ஒரு நகைசுவை கலந்த த்ரில்லர் படம். ‘புகழ்’ பெயருக்கேற்றபடி வெற்றிப் படமாக அமையும். என்எச்4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் அவருக்கு ஒரு முக்கியப் படமாக இருக்கும். இந்தப் படம் பெரிய அளவில் பேசப்பட்டு புகழ்பெற நாங்கள் எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறோம். ரேடியன்ஸ் மீடியா வருண் மணியனோடு இணைந்து இந்தப் படத்தை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் ‘ என்று கூறியுள்ளார் சுஷாந்த். பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமானவர் ஜெய். இவர், சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.