அப்படி என்ன சொல்லிவிட்டாய் ரஜினி? வானத்துக்கும் பூமிக்குமாய் ஏன் குதிக்கிறது அந்த கும்பல்!
வலிப்பு வந்தவன் பேசும் வார்த்தை போல ஏன் புரியாதனபேசி குழறுகிறது!! இல்லாததை சொல்லிவிடவில்லை; நடக்காததை நீ நவின்று விடவில்லை;ஏட்டிலே பதிந்ததை இயம்பியுள்ளாய்; எல்லோர்க்கும் தெரிந்ததையே விளம்பியுள்ளாய்.
பின்னர் ஏன் இந்தகும்பல் கர்ஜிப்பதாய் நினைத்து வெறுமே கத்துகிறது? தானாக சினங்கொள்ளாமல் ஏவிவிட்டதற்க்காகவே அறைகூவல் விடுகிறது!!ஒன்றினைந்திருந்த போதிலும் தனித்தனியே ஏன் ஓலமிடுகிறது! உன் ரத்தத்தின்குணம் தெரிந்திருந்த போதிலும் கண்டனம் என்று கரைகிறது!! எதிர்த்திட வருபவை எலிகளென்றும், பழித்திட வருபவை சொரிப் பன்றிகளென்றும் தெரியும்!
இனிய தமிழ்க்கூட்டமாம் பெருங்குடி இந்துக்களுக்கு என்றிலிருந்தோ உள்ளங்கை நெல்லிக்கனியன்ன புரியும். சமூகநீதிக்கு சொந்தக்காரர்கள்! தானே தோன்றி ஒங்கியுயர்ந்து தழைத்த இந்து தர்மத்தை நிதம்நிதம் ரணப்படுத்தி தங்கள் வயிறுநிரப்பி, மற்ற தர்மத்தை ஆதாயத்திற்க்காகவும்’ பயந்தும் கனவிலும்கூட தொட விமர்ச்சிக்க திராணியில்லா சமர்த்தர்கள். பகுத்தறிவு நாத்திக முக்காட்டு மேலோர்கள் !
அவர்கள் வீட்டு திருமணம் ரகசியமாய் ஆலயத்தே அரங்கேறியதுண்டு: தேர்தலில் ஜெயிக்க ஹோமங்கள் நடத்தியதுண்டு; மனக்கிலேச அழுத்தம்போக திருட்டு அர்ச்சனை இருட்டுகோவிலில்செய்ததுண்டு.
சத்தியத்தை சொல்லவேண்டுமெனின், பதவியை தக்கவைத்து, பாத்திரம் நிரப்பி, போலிபுகழ் விரும்பும் லாபத்துக்கே தன்னை விற்க்கும் கோழைப்போராளிகளை ஏவி உன்னையொத்தோர் மீது சேறடிக்கவும், தனக்காக மாறடிக்கும் தனது ஊடகங்களுக்கு சோறிடவும், தன்னையே முன்னிறுத்தவும் தானே சமீபத்திய ஒத்திகைகள்!
தந்தையொத்தவன் மூத்த, நரைத்த, கோலூன்றும் யௌனன் இளம்பிராய மகளொத்த ஒருவளை இல்லம் ஏற்றதை கண்மூடி இந்நொடிவரை மனதார ஏற்ற சீர்திருத்த செம்மல்களுக்கு, சினிமாவிலிருந்தும் பேராண்மை திலகமாய் நீ இருப்பது எவ்விதம் அடுக்கும் ரஜினி?
அம்மண கடவுளாக்கி அணியும் செருப்பாலடித்து அதை ஆரவாரமாய் கொண்டாடிய கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை மாநாடு நடத்திய நிகழ்வை, ஆண்மையோடு அச்சிலேற்றி நிரந்திர சாட்சியாக்கிய இந்துப் “பெரியோ சோ வின் துக்ளக்” விழாவிலே அதை ஞாபகபடுத்தியதற்கு, மெய்ம்மை பகன்றதற்கு, “நீ எப்படி, அப்படி பேசலாம்? மன்னிப்பு கேள்” என்று உன்உடலிலே எத்தனை முடிகளோ அத்தனை எண்ணிக்கையில் அதட்டும் குரல்கள்! ஆனால் ஒரேயொரு வார்த்தையிலே முடித்தாயே ” மாட்டேன்” என்று! அது பலே!!
ஹரிச்சந்திரன் தான் எங்கள் சிந்தை சிந்தனை இரண்டிலும் !! கருத்துரிமை என்பதற்காக சுண்டைக்காய்களெல்லாம் சுருதி மீட்டுவதோ? நரியின் ஊளையும், நாயின் ஹீனக்குரைப்பும், கொசுக்களின் “ங்கொய்” களும், நீர்கால நுணலின் வீணான வாசிப்பும் தனி ஆவர்த்தனமாய் ஆகிடுமோ?
துக்ளக் வைத்திருந்தால் அவன் அறிவாளி என்றாய். அதிலென்ன தவறு?. “என் மனைவி அழகி, என் மகன் சமர்த்து” என நான் சொன்னால் , தவறில்லை அதிலே! அதில் குறை காணின், அவர் இடம் பொருள் ஏவல் பற்றி உணராதவர், அறியாதவர்.
உனக்குத்தான் எந்தெந்த திசைகளிலிருந்து எதிர்ப்பு! தனக்குத் தானே சூப்பர்ஸ்டார் பட்டம் வைத்துக் கொண்டாயென்று ஒரு பழி; ஆன்மீக அரசியலென்று பித்தலாட்டம் போடுவதாக ஒரு நடிகனின் குரல்!.தமிழனல்ல ரஜினி, முதல்வராவதெப்படி?வயிற்றெரிச்சல்.
நீ கிழவனாகி நரைத்த இல்லை நடித்தபோதும் பூஜைபோட்டவன்றே நானூறு கோடிக்கு போனியாகின்றதே! உன்னை இடிப்பவர் மட்டுமன்றி அன்னார் புத்திரசிகாமணிகளுக்குமல்லவா இங்கு மார்க்கெட் இல்லை!! அந்த வெளிப்பாடுதானே இது!
இல்லாததை சொல்லவில்லையே ரஜினி!
நரசிம்மத்தூணாய் ஓங்கி நிற்க்கும் உன்னை கறைப்படுத்தினால் , தரைப்படுத்தினால் தான் ஒருவேளை நாளை முதன்மைநாற்காலி இருக்கும் திசையையாவது காணும் வாய்ப்பும் “பிறசாந்த” மும் என்றொரு ஆரூடம்.
ஏன் சித்ரவதை செய்கிறது, சிம்ம சொப்பனமாகி உன் பிம்பம்? அவர் தானாக எண்ணிய தலைமைபதவிக்கு நீ போட்டியிடாமலேயே ஏன் அது மோதுகிறது? சருகு குப்பைகளை சுழட்டியடிக்கும் பெருவெள்ளமாய் ஆவாயோவென்னும் அச்சம்!
ரஜினி ஓர் “முட்டாள்’, என முழங்குகிறதே ராவணக்கட்சியின் ஒரு கூட்ட மிடறு! அம்பை நோவதில்லை நீ, எய்தவனிருக்க!!
கலங்கிப்போகவேண்டும்; நீ நடுங்கிப் போகவேண்டும்; தானய் ஒதுங்கி வழிவிடவேண்டும். இதுவே எதிரணியார் இச்சை! எதிர்பார்ப்பு!! ஏகோபித்த எண்ணம்!!!
அப்படி என்னதான் பேசிவிட்டாய் ரஜினி? வஞ்சகர் நெஞ்சில் நஞ்சுதான் விதவித வார்த்தையாய் எப்படியெப்படி தெரித்துவிழ்கிறது ; அடடா? தண்ணீர் வரக்காணோம் கர்நாடகாவிலிருந்து தலைவர் மட்டும் வரணுமா; இங்கித்தவன் இளிச்சவாயன். அதுமட்டும் நடக்காது ராஜா..என்று நையாண்டி பண்ணுகிறான் ஒரு பரதேசி! அங்கீகாரமற்றவன், தலைவனாகும் முன்னரே சொத்துப்பட்டியல் அனுமார்வால் போல் நீளமோநீளம். பேச்சில், பெயரில் செல்வந்தன்! சிந்தையில், செயலில் பரமயேழை!!
திருக்குறள் வைத்திருந்தால்தான் அறிவாளியாம். ஆம். பேசி பாராட்டுகிற அந்தநொடியில்தான் வாடகை வீட்டில் வசிக்கிறார் கலைஞானம் என்று அறிந்தாய்; உடனே இரக்கமுற்று, ஏற்றிவிட்ட ஏணியை என்றும் மறவாத குணம்கொண்ட நீ ஆங்கே மேடையிலேயே அறிவித்தாய். சொல்லிய வண்ணம் வாங்கி சமர்ப்பித்தாய் வீடு . நன்றியுணர்ச்சி என்பதை தமிழர்கள் கண்டோம்.
” மேன் வர்சஸ் வைல்ட்டு ” க்கு கிடைத்த வெகுமதியை நேராக கவிதாலயாவிற்கு உன் குருதட்சணையாய் சமர்ப்பித்தாய். தெரியாமல் பலப்பல உதவிகள் .
திருக்குறள் உபதேசித்ததை பின்பற்றுகிற நீ , வாக்கு அளிக்க விரும்புகிற எங்களுக்கு உயர்ந்ததமிழன்! சுத்தத் தமிழன்!! ரஜினி நீ தமிழனில்லை!
எம்ஜிஆர்க்கு கூட ஆரம்பத்தில் நீ மலையாளி.. நடிகன் என்று ஆயிரமாயிரம் துவேஷம் ..வசை…எதிர்ப்பு.
குரைப்பை, ஓலத்தை எதிர்பக்க ஊளையை புறந்தள்ளினார்.
மக்களாகிய எங்களை நம்பினார். அரியனை ஏறினார். அமரராகும் வரை கோட்டை அவர்வசம்மட்டுமே!
சூது நிரம்பிய செயலும், அளவுக்குமீறிய சுடுவார்த்தைகளும் வலம் வருகின்றன மீண்டும்!! சரித்திரம் திரும்புகிறது எனில், வரலாறு படைக்கிறவன் சமீபத்தே இருக்கிறான் என்பதே பொருள்!! .
சகடாசூரன், பூதனை,பகாசூரன், சாணுரன் முஷ்டிகன் என
கண்ணன் “சோலி முடிக்க” ஏவிய கம்சனுக்கு, நெருப்பென்ன நின்ற நெடுமால் மாதிரி, இன்றைய போதில் கனவு முதலமைச்சருக்கு நீயும் படுகிறாய்! வெப்பம் தருகிறாய்!!
பெருமீனை விழுங்கக்கூடியது திமிங்கிலம்; அந்த திமிங்கிலத்தையே விழுங்கக்கூடியது திமிங்கிலகிலம். அவர்களோ சிறுமீன் ; ரஜினி நீயோ திமிங்கிலகிலம்.
உய்யானக் கிளிக்கு உதிரும் பழத்துக்கா பஞ்சம்?
உமணத்தி கை இனிப்பு உப்பாயிராது. நடந்த கூத்துகளை, ஒப்பாரிகளை உபேட்சி.
உன் சீர்த்தியும் கீர்த்தியும் எப்போதோ விஸ்வரூபமெடுத்துவிட்டது ஒவ்வொரு முறையும் விதவித ஒளிக்கற்றைகளை வேறுவேறேய் பலவிதமாய் புதுப்புதிதாய் ஒளிர்கிற அரிய ரத்தினம் நீ !
உன் ஆன்மீக அரசியல் வானெழும்பும் அரியதருணம் இது!இயக்குவது விதியாகும். ஆகையினால் களமிறங்கு!இயங்குவதும் விதியாகும்.வெற்றிமகள் அடிநெருங்கு!!
கட்டுரை ஆக்கம்:
கவிஞர். கண்ணன் திருமலை ஐயங்கார்
நாக்பூர், மஹராஷ்ட்ரா