- Ads -
Home கட்டுரைகள் தினசரி ஒரு வேத வாக்கியம்: 48. பக்தி என்றால் என்ன?

தினசரி ஒரு வேத வாக்கியம்: 48. பக்தி என்றால் என்ன?

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

48. பக்தி என்றால் என்ன?

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன்

“ப்ரேஷ்டமு ப்ரியாணாம் ஸ்துஹி” – ருக்வேதம்.

“பிரியமானவற்றுக்கெல்லாம் பிரியமானவனை துதிசெய்!”

ருக் வேதத்தில் பக்தி பாவனையை வளர்க்கும் மந்திரங்களில் இதுவும் ஒன்று. பாகவதம் போன்ற புராணங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்ட பாகவத தர்மம் இதில் உள்ளது.

சாத்வஸ்மின் பரம ப்ரேம ரூபா“- பரமாத்மாவிடம் கொள்ளும் உயர்ந்த அன்பே பக்தி என்பது நாரதர் விளக்கம்.

ஸா பரானுரக்திரீஸ்வரே” என்றும் முன்னோர் விவரிக்கின்றனர். பரமமான அனுரக்தியே பக்தி. 

மிக மிகப் பிரியமானவராக பரமாத்மாவை எண்ணி மனதால் தியானம் செய்து, வாயினால் கீர்த்தனம் செய்து, செயலால் அனைத்தையும் சமர்ப்பிப்பது – என்பது மேற்சொன்ன வேத வாக்கியத்தின் பொருள்.

யாப்ரீதிரவிவேகானாம்  விஷயேஷ்வனபாயினீ” என்கிறான் பிரகலாதன். “அவிவேகிகளுக்கு அற்பமான விஷயங்கள் மீது எப்படிப்பட்ட விருப்பம் இருக்குமோ, பக்தர்களுக்கு இறைவன் மீது அதுபோன்ற அன்பு இருக்கும்” என்று எடுத்துரைக்கிறான்.

‘பரமப்ரேமை’ என்ற சொல்லிலேயே இவை அனைத்தும் உள்ளன. இறைவனிடம் அதுபோன்ற அன்பு ஏற்பட்டால் பக்தனின் ஜீவிதம் தன்யமாகி விடுகிறது.

இறைவனிடம் கொள்ளும் பிரேமையை மட்டுமே விரும்புவான் பக்தன். அந்த அன்பை தன் கீர்த்தனை மூலம், அர்ச்சனை மூலம், தியானம் மூலம் வெளிப்படுத்தி நிரந்தரம் பகவத் அனுபவத்தில்  ஆழ்ந்திருப்பான்.

prahlada nrusimha

தூய்மை, உண்மை, தர்மம், அன்பு இவை நிறைந்தவர் பகவான். அவரிடம் அன்பு செலுத்திய உடனே இந்த குணங்களை எல்லாம் கடைப்பிடிக்கத் தொடங்கி விடுவான் பக்தன். பகவான் தர்மப் பிரியன் ஆதலால் பக்தன் தர்மத்தை மீற மாட்டான். சத்தியத்தை மீற மாட்டான். லோபம், சுயநலம் போன்றவற்றை அருகில் நெருங்க விட மாட்டான். சாத்வீகமான நடத்தையை  வளர்த்துக் கொள்வான். பிரபஞ்சத்தைப் பிரேம மயமாக தரிசிக்கத் தொடங்குவான். தனக்கு மிகப் பிரியமான பகவானிடம் அவ்வாறு அன்பு செலுத்துபவன் பகவானுக்கும் பிரியமானவன் ஆவான். “யோ மத் பக்த: ஸமேப்ரிய:”என்பது கீதை வசனம்.

புத்தியோடு தொடர்புடையது ஞானம். இதயத்தோடு தொடர்புடையது பிரேமை. புத்தி, சிந்திக்கும் இடம். இதயம் அனுபவிக்கும் இடம். இதயம் பிரேம மயமானால் ஞானம் கூட பிரமையை அனுபவிக்கத் தொடங்கும்.

பாகவத தர்மம் மொத்தமும் ஞானம், பிரேமை இவற்றின் சமன்வயத்தையே போதிக்கிறது. தார்மீகமான அர்ப்பணிப்பு வலிமை பெறுவதற்கு, பக்தி தன் இயல்பான நிலையை அளித்து உதவுகிறது.

உண்மையில் நம் வேத சனாதன தர்மத்தின் பகுதிகளான யக்ஞம், யாகம் போன்ற செயல்கள் குறைந்து விட்டாலும் இன்னும் கருத்து வடிவில் வலிமையோடு விளங்குகிறது என்றால் இத்தகு பக்தி பாவனை மிக உயர்ந்த ஆதர்சமாக கூறப்படுவதால் தான்.

நம் கலாச்சாரத்தில் ஆதரிசமான  மகனீயர்கள் அனைவரும் பரம பக்தர்கள். ஆதிசங்கரர், ராமானுஜர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, விவேகானந்தர், அன்னமய்யா, தியாகராஜர் முதலானவர்கள் அனைவரும் பக்தி பாவனைக்கு ஸ்பூர்த்தியாக நிற்கிறார்கள்.

vivekananther

தனிமனிதன் அதர்மத்திலிருந்து விலகி தர்மத்தைக் காக்க வேண்டும் என்றாலும் அனைத்து மக்களிடமும் சமரசமாக நடந்துகொள்ள வேண்டும் என்றாலும் அதற்கு கடவுள் பக்தி உதவுவது போல் வேறு எதுவும் உதவாது. இது வரலாறு நிரூபித்து வரும் உண்மை. இது பக்தியால் ஏற்படும் சமுதாய நலன். பக்தி, தனி மனிதனுக்கு அளிக்கும் மிகப்பெரும் உதவி தெய்வீகமான பரப்பிரம்மத் தொடர்பு. அது சமுதாயத்தின் தார்மீகமான அமைதிக்குக் காரணம் ஆகிறது. 

ஆதரிசமான சான்றோர்கள் அடைந்த பரிபூரணத்தை அடியவர்கள் அடையாமல் போகலாம். ஆனாால் அது மனதை எச்சரித்து அதர்மத்தின் வழியில் செல்ல விடாமல் காப்பாற்றுகிறது.

மேலும் நம் தேசத்தின் வித்யைகள் பக்தியோடு கூடி இருப்பதாலேயே இன்னும் உயிர்ப்போடு விளங்குகின்றன. மருத்துவம், கணித சாஸ்திரம் இவற்றைக் கூட இறைவனின் சக்தியாக ஏற்ற சாஸ்திர அறிஞர்கள் பகவதர்ப்பணம் என்பதாகத்தான் தொடர்ந்தார்கள். ஆச்சரியமான திறமையோடு ஒளிரும் வித்யைகளெல்லாம் “சங்கீத ஞானமு பக்திவினா” என்கிறார்போல் பக்தியால் நிரம்பி இன்னும் உயிரோடு உள்ளன.

இந்தக் காரணத்தால்தான் நம் வித்யைகள், தர்மங்கள், வாழ்க்கை வழிமுறைகள் எல்லாம் பவித்திர தன்மையை இழக்காமல் உள்ளன.

சுயநலமற்ற கடவுள் பிரேமையை உயர்ந்த ஆதர்சமாக ஏற்பது மனிதனை புனிதனாக்குகிறது. அவனுடைய பிரபாவத்தால் சமுதாயமும் புனிதத்தை அடைகிறது.

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version