![செருப்பு வீச்சு, மை வீச்சு.. செவுட்டில் அறை வரிசையில்… ஆம் ஆத்மியின் ஸ்பான்ஸர் ஷாகீன் பாக் துப்பாக்கிச்சூடு! 1 aamaadhmi 1](https://dhinasari.com/wp-content/uploads/2020/02/aamaadhmi-1.jpg)
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் தில்லி ஷாஹீன் பாக் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கைது செய்யப்பட்ட கபில் குஜ்ஜார், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளனர் போலீஸார்.
ஆம் ஆத்மி கட்சி வளர்ந்ததே, அதன் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலை நோக்கி செருப்பு வீசுவது, மை வீசுவது, எங்காவது பொது இடத்தில் திடீரென செவுட்டில் அறைவது, தன் நிர்வாகத்தை எதிர்த்து தானே உண்ணாவிரதம், போராட்டம் நடத்துவது என்று அரவிந்த் கேஜ்ரிவால் செய்த ‘அனுதாப அலை’ நாடக உத்திகளின் வரிசையில் தற்போது ஷாகீன் பாக் பகுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூடும் இடம் பிடித்துள்ளது. தில்லி சட்டமன்றத்துக்கு தேர்தல் வரும் நிலையில், இது போன்ற துப்பாக்கிச்சூடு நாடகம், பழியை வேறு பக்கம் திருப்பி ஆதாயம் அடையும் நோக்கில் ஆம் ஆத்மியால் நடத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி, தில்லி ஜாமியா மிலியா பல்கலை மாணவர்கள், கடந்த மாதம், 30ல் நடத்திய பேரணி மீது, துப்பாக்கியால் சுட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஷாஹீன் பாக் பகுதியில், பிப்.,1ல் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்தது. போராட்டம் நடந்து வரும் பகுதியில் ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், துப்பாக்கியால் சுட்ட நபர், உத்தர பிரதேசத்தை சேர்ந்த கபில் குஜ்ஜார் என தெரிந்தது.
கைது செய்யப்பட்ட கபில் குஜ்ஜார் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்றும், அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில், கடந்த 2019ம் ஆண்டில் அவர் தனது தந்தையுடன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மியின் தலைவர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். ஆனால், இதனை ஆம் ஆத்மி கட்சியினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ள அக்கட்சி, காவல் துணை ஆணையர் தேர்தல் விதிமுறைளை மீறியதாக தெரிவித்துள்ளது. மேலும் துணை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது
இந்நிலையில், ஆம்ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், தில்லி போலீசார் பா.ஜ.,வின் செய்திதொடர்பாளரை போல் பேசுவதாக குற்றம்சாட்டி உள்ளார். இது பாஜக.,வின் சதி என்றும், அமித்ஷாவின் தந்திரங்களில் இதுவும் ஒன்று என்றும், காவல் துறை துணை ஆணையர் தாமரைச் சின்னத்தைக் குத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.