Indian Army strikes Pakistan posts in Nowshera in punitive fire
புது தில்லி:
எல்லையில் உள்ள பாகிஸ்தான் நிலைகளைக் குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறது. பங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குள் தங்கள் நாட்டில் இருந்து எல்லைப் பகுதி வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் வழக்கம் போல் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் உதவி செய்யும். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இந்திய- பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தீவிரவாதிகள் ஊடுருவல்களுக்கான முயற்சிகளும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்திய ராணுவம் தரப்பில் அவ்வப்போது பதிலடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால் அது குறித்து இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராணுவ அதிகாரிகள், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். நவ்ஷெரா பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் பீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், ஊடுருவல்களுக்கு உதவும்வகையில் பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவ உயரதிகாரிகள் கூறினர்.