புதுதில்லி :
‘ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறை அமலாகும் ஜூலை 1ம் தேதிக்கு முன்பாக, பொருட்கள் விலையை உயர்த்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் அதியா எச்சரித்துள்ளார்.
நாடு முழுவதும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வருகிறது. இதுவரை 1,200 பொருட்கள் மற்றும் 500 வகையான சேவைகளுக்கு 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என, நான்கு வித வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சேவைகள் வரி, தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்கிறது. இருப்பினும், சேவை நிறுவனங்கள், மூலப்பொருட்களுக்கு செலுத்திய வரியை திரும்பப் பெறும் என்பதால் தற்போதைய அளவிலேயே வரி விகிதம் இருக்கும். இந்நிலையில் சில நிறுவனங்கள் லாபம் ஈட்டும் நோக்கில் விலையை உயர்த்தியுள்ளதாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து, வருவாய்த் துறைச் செயலர் ஹஷ்முக் அதியா செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது,
ஜி.எஸ்.டி., சட்டத்தின்படி, வரி குறைக்கப்பட்டால் அதன் பலனை நிறுவனங்கள் நுகர்வோருக்கு வழங்க வேண்டும். அவ்வாறு பலன்கள் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க லாப தடுப்பு ஆணையம் அமைக்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. எனவே ஜி.எஸ்.டி., அமலுக்கு வரும் வரை நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்புப் பொருட்கள், சேவைகள் ஆகியவற்றுக்கான விலையை உயர்த்த வேண்டாம். சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே மூலப்பொருள்களின் விலை உயர்வு குறித்து நிறுவனங்கள் யோசிக்கலாம். அவ்வாறு இல்லாமல், லாப நோக்கத்தில் விலையை உயர்த்தினால், அந்நிறுவனங்களின் செயல்பாடுகள், நிதி நிலை அறிக்கைகள் ஆகியவை குறித்து லாப தடுப்பு ஆணையம் விசாரித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டால், பல பொருட்களின் விலை குறையும். குறிப்பாக, உணவு தானியங்கள் பூஜ்ஜிய வரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.