![குளிர்பான விளம்பரத்தால் கொரோனா விதிகளை மீறி நிறுவனத்தை சூரையாடிய காங்கிரஸார்! 1 congress](https://dhinasari.com/wp-content/uploads/2021/04/congress-1024x547.jpg)
குளிர்பான விளம்பரத்தில் சோனியா மற்றும் ராகுல் காந்தியை கேலி செய்துள்ளதாக கூறி சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அலுவலகத்தை காங்கிரஸ் தொண்டர்கள் சூறையாடினர்.
மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பிரபல குளிர்பான நிறுவனம் ஸ்டோரியா புட்ஸ் அண்டு பீவரேஜ். இந்நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு தனது புதிய தயாரிப்பு குளிர்பானத்தை சந்தைப்படுத்தும் நோக்கில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.
தற்போது அந்த விளம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஸ்டோரியா புட்ஸ் அண்டு பீவரேஜ் நிறுவனத்தின் அந்த விளம்பரம் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியையும், அவரது மகன் ராகுல் காந்தியையும் கிண்டல் செய்வது போல் இருப்பதாக அந்த கட்சியினர் கடும் கோபம் கொண்டனர்.
இதனையடுத்து மும்பையில் உள்ள ஸ்டோரியா புட்ஸ் அண்டு பீவரேஜ் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு வந்த காங்கிரஸ் தொண்டர்கள் அந்த அலுவலகத்தை சூறையாடினர்.
ராகுல் காந்தி ஜிந்தாபாத், சோனியா காந்தி ஜிந்தாபாத் என முழக்கமிட்டனர். இது குறித்து கேள்விப்பட்டு போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
கோவிட்-19 நெறிமுறைகளுக்கு புறம்பாக முககவசம் அணியாமல், கட்சி கொடியுடன் காங்கிரஸ் தொண்டர்கள் அந்த அலுவலகத்துக்கு வந்து ரகளையில் ஈடுபட்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர் கிரிட் சோமையா கூறுகையில், காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது ஆட்சேபனைகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அவர்களை மக்களை (நிறுவன ஆட்களை) மிரட்டியிருக்கக்கூடாது.
கோவிட்-19 வழிகாட்டுதல்களை மீறியதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் மீது மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நடவடிக்கை எடுப்பாரா? அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.