திருப்பதி: திருமலை திருப்பதி கோவிலில் மாதம் ஒரு முறை தேவஸ்தானம் சார்பில் கணக்குகள் தணிக்கை செய்யப்படும். இது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் பின்னர் அது 2 மாதத்துக்கு ஒருமுறை என்று ஆனது. பிறகு, ஆந்திர அரசின் நிபந்தனைப் படி தேவஸ்தான வரவு – செலவுச் கணக்கை 3 மாதங்களுக்கு ஒரு முறை தேவஸ்தானம் உள் தணிக்கை செய்து வருகிறது. மேலும் வருடத்துக்கு ஒரு முறை ஆந்திர அரசின் தணிக்கைத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். தேவஸ்தான கணக்கு வழக்குகளை செயல் அதிகாரி மற்றும் 2 செயல் இணை அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு சோதனை செய்யாததால் ரூ. 180 கோடி வரை தேவஸ்தான கணக்கில் வராமல் மாயமாகி உள்ளதாக ஆந்திர மாநில தணிக்கை துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கான ஆவணங்களும் மாயமாகி இருப்பது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேவஸ்தான கணக்கு வழக்கில் மத்திய அரசின் தணிக்கைத் துறை தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று ஆந்திர அதிகாரிகள் மத்திய தணிக்கை துறைக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். இந்நிலையில் ரூ.180 கோடி மாயமான விவகாரத்தை, திருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். அந்தப் பணம் எப்படி மாயமானது என்பதைக் கண்டுபிடிக்க இருநபர் குழுவை அமைத்துள்ளார்.