![]()
புது தில்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் அருகே அவரது ஆதரவாளர்கள் கட்டியிருக்கும் கோயில் வரும் ஞாயிறன்று திறக்கப்படவுள்ள நிலையில், இந்த முயற்சி குறித்து மோடி அதிருப்தி தெரிவித்திருக்கிறார். இந்த முயற்சி குறித்து தனது ட்விட்டர் கணக்கில் கருத்து தெரிவித்திருக்கும் மோடி, இது அதிர்ச்சி அளிக்கிறது, இது இந்தியாவின் பெரும் பாரம்பர்யங்களுக்கு எதிரானது” என்று கூறி இந்த முயற்சியில் ஈடுபடவேண்டாம் என்று தனது ஆதரவாளர்களைக் கோரியிருக்கிறார். ராஜ்கோட் அருகே உள்ள கோத்தாரியா என்ற கிராமத்தில் மோடி ஆதரவாளர்கள் சுமார் 350 பேர் இந்தக் கோயில் கட்ட பொதுமக்களிடம் நன்கொடை வசூலில் இறங்கியதாகவும், ஏற்கனவே கட்டப்பட்ட இந்தக் கோயிலில் மோடியின் புகைப்படங்களை வைத்து வழிபடுவதாகவும் கூறப்படுகிறது. இப்போது சுமார் 1.70 லட்ச ரூபாய் செலவில் மோடியின் உருவச்சிலை ஒன்று வார்க்கப்பட்டு அந்தக் கோயிலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. நம் நாட்டில், அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல… நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் கூட அவர்களது சிலையை வைத்து கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உள்ளிட்டோருக்கு அவரது ஆதரவாளர்கள் கோயில்களை கட்டியிருக்கிறார்கள்.