பெங்களூர் : நாட்டில் இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டுத் தயாரிப்பைப் பெருக்கி வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். மேலும், நாட்டின் பாதுகாப்புத்துறை, மேக் இன் இந்தியா திட்டத்தின் இதயம் போன்றது என்றார். இன்று பெங்கரூவில் துவங்கிய விமான கண்காட்சியை திறந்து வைத்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கர்நாடக மாநிலம் பெங்களூருல் 10வது ஆண்டு ஏரோ இந்தியா 2015 கண்காட்சி இன்று துவங்கி பிப்ரவரி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை இன்று துவக்கி வைத்த பிரதமர் மோடி, பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர், “இங்கு நடைபெறுவது இந்தியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சி. இது இந்தியாவின் புதிய நம்பிக்கையை மட்டுமல்ல, உலக நாடுகளின் கவனத்தையும் நம் பக்கம் திருப்பியுள்ளது. பாதுகாப்புத் துறையில், இறக்குமதியை 20 – 25 % வரை குறைத்தாலே நேரடியாக ஒரு லட்சம் முதல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை வேலைவாய்ப்புக்களை புதிதாக நம் ஏற்படுத்த முடியும். உள்நாட்டில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பை 40- 70 % வரை உயர்த்த வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் நமது பாதுகாப்பு துறையில் இருப்பு இரு மடங்காக அதிகரிக்கும். “வலிமையான பாதுகாப்புத்துறை இந்தியாவுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும். மேலும், இந்தியாவை வளப்படுத்தவும் செய்யும். பாதுகாப்பு துறை எப்போது தயார் நிலையில் இருப்பது மிக அவசியம். நமது பாதுகாப்பு படையை மேலும் நவீனமயமாக்க வேண்டும். வரும் காலத்தில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால் அதன் தேவைக்கு ஏற்ப நாமும் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உலக நாடுகளின் பாதுகாப்பு மையமாக இந்தியா திகழ்கிறது. ஆற்றல் வாய்ந்த ஒரு துறையாக இந்தியாவின் பாதுகாப்புத் துறையை மேம்படுத்த விரும்புகிறோம். பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு அமைப்புக்களின் பங்களிப்புடன் பாதுகாப்புத் துறையை புது வடிவில் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். – என்று மோடி பேசினார்.