புது தில்லி மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, தில்லி டவுண்ஹாலில் உள்ள ஸ்ரீபோர்ட் அரங்கில் இன்று காலை இந்திய அமெரிக்க உறவு குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஸ்ரீ போர்ட் அரங்கில் , ஒபாமாவின் உரையைக் கேட்க மாணவர்கள்,மற்றும் முக்கிய பிரமுகர்கள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய ஒபாமா, இந்து மதம், யோகாவை அமெரிக்காவிற்கு கொண்டு வந்தவர் விவேகானந்தர். அவரை 100 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கா வரவேற்றது என்றார்.. மேலும், குடியரசு தின விழாவில் பங்கேற்ற முதல் அமெரிக்க அதிபர் நான் என நினைக்கும் போது எனக்குப் பெருமையாக உள்ளது என்று கூறினார். மேலும், இந்தியா-அமெரிக்கா இடையே நட்புறவில் புதிய சகாப்தம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் சார்பில் இந்திய மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்க மக்களின் நட்பை இந்திய மக்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன் என்றார். லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்ட நாடு இந்தியா. தேநீர் விற்கும் நிலையில் உள்ள ஒருவர் கூட பிரதமர் ஆகலாம் என்ற நிலையில் இந்தியா உள்ளது. ஒரு சமையல்காரனின் பேரன் கூட அதிபராக முடியும் என்ற நிலையில் அமெரிக்கா உள்ளது. ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்த நாடு பெண்களை புறக்கணிக்கக் கூடாது. பெண்களை முன்னேற்றும் நாடு தானாக முன்னேறும். இந்திய ஆயுதப் படையில் பெண்களின் பங்களிப்பு பெருமிதத்தை ஏற்படுத்துகிறது ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா உறுப்பு நாடாக அமெரிக்கா ஆதரவு அளிக்கும். அமெரிக்க மக்களின் பிரதிபலிப்பாகவே இந்தியாவை நான் பார்க்கிறேன். நிலவுக்கும் செவ்வாய்க்கும் விண்கலம் அனுப்பிய மிகச் சில நாடுகளில் நாமும் உண்டு. இரு நாடுகளுமே பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவை. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஒத்துழைப்பு அளிப்போம். என்று பேசினார் ஒபாமா.