![]()
மும்பை மறைந்த புகழ்பெற்ற கார்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.. பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் பத்திரிகைகளில் கேலிச் சித்திரங்கள் மூலம் கருத்துக்களை வெளியிடுவதில் சிறந்தவர். திருவாளர் பொது ஜனம் என்ற பெயரில் பிரபல ஆங்கில பத்திரிகைகளில் கேலிச் சித்திரங்கள் வெளியிட்டு பணியாற்றியுள்ளார். புனேயில் வசித்து வந்த அவருக்கு 2003–ம் ஆண்டு பக்கவாதம் ஏற்பட்டது. இடது கை செயல் இழந்தது. வலது கையால் கார்ட்டூன்களை தொடர்ந்து வரைந்து வந்தார். 60 ஆண்டுகளாக பத்திரிகைகளில் பணியாற்றி வந்தார். 94 வயதான ஆர்.கே லட்சுமண் சிறுநீரக கோளாறு காரணமாக புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் அமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. [su_heading size=”30″ margin=”30″]ஆர்.கே.லட்சுமண் வாழ்க்கைக் குறிப்பு: [/su_heading] ஆர்.கே.லட்சுமண் 1921–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24–ந் தேதி மைசூரில் பிறந்தார். இவரது பெற்றோர் தமிழ் நாட்டின் ராசிபுரத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை கிருஷ்ணசாமி அய்யர் சென்னையில் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் அவர் மைசூர் மகாராஜா மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டதால் குடும்பத்துடன் மைசூரில் குடியேறினார். அங்கு ஆர்.கே.லட்சுமண் பிறந்தார். பத்திரிகைகளில் பணியாற்றும் போது தனது பெயருடன் பூர்வீக ஊரை குறிப்பிடும் வகையில் ராசிபுரம் கிருஷ்ணசாமி அய்யர் லட்சுமண் என குறிப்பிடும் வகையில் ஆர்.கே.நாராயண் என வைத்துக் கொண்டார். ஆர்.கே.லட்சுமண் பிரபல நடன கலைஞரும் நடிகையுமான குமாரி கமலாவை திருமணம் செய்தார். 1960–ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பழம் பெரும் நடிகையான குமாரி கமலா தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் 100–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அந்தக்கால சினிமாவில் இவரது நடனம் மிகவும் பிரபலம். வாலிபர் சங்கம், ராமநாம மகிமை படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், தொடர்ந்து ஜகதல பிரதாபன், ஸ்ரீவள்ளி, மீரா, நாம் இருவர், என் மகன், சிவகங்கை சீமை, பாவை விளக்கு, பார்த்திபன் கனவு, கொஞ்சும் சலங்கை ஆகிய படங்கள் நடத்துள்ளார். குமாரி கமலாவை விவாகரத்து செய்த பின்பு ஆர்.கே.லட்சுமண் மறுமணம் செய்தார். 2–வது மனைவி பெயரும் கமலா என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீனிவாஸ் என்ற மகன் இருக்கிறார். ஆர்.கே.லட்சுமண் மத்திய அரசின் பத்மபூஷன், பத்மவிபூஷண் விருதுகளும், பத்திரிகை துறையில் 60 ஆண்டு பணிக்காக மகாசேசே விருதும் பெற்றுள்ளார்.