டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதிக்கு எதிராக அவரது மனைவி லிபிகா மித்ரா சமீபத்தில் போலீசிலும், பெண்கள் ஆணையத்திலும் குடும்ப வன்முறை புகார் அளித்தார். புகாரில் தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாகவும் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார்.
அதன் பேரில் சோம்நாத் பாரதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினார்கள். இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க விசாரணை கோர்ட்டில் சோம்நாத் பாரதி முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு தள்ளுபடியானதால் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவும் நேற்று முன்தினம் தள்ளுபடியானது. எனவே எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது.
எனவே கைதேர்ந்த குற்றவாளியை போன்று தலைமறைவாக இருந்த டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதியை டில்லி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆக்ரா அருகே அவர் தலைமறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.