பாலிவுட் திரைப்படங்களை சீனாவில் அதிகம் திரையிட வேண்டும் என்று கலாசார பரிமாற்ற உணர்வுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் விரும்புவதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே கூறியுள்ளார். மேலும் அவர், சீன அதிபருக்கு பாலிவுட் படங்கள் மீது தனிப்பட்ட விருப்பம் உள்ளது; பாலிவுட் மற்றும் மாநில மொழிப் படங்களையும் அவர் ரசித்துப் பார்த்துள்ளார் என்று கூறியுள்ளார்.
இந்திய திரைப்படங்கள் அதிகமாக சீனாவிலும், சீனப் படங்கள் இந்தியாவிலும் திரையிடப்பட வேண்டும் என்பது தொடர்பான பேச்சு இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின் போது இடம் பெற்றுள்ளதாக கோகலே கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய கோகலே, “இந்தியா – சீனா இடையே பொழுதுபோக்கு அம்சங்களில் ஒரு கூட்டுறவு ஏற்படுத்துவது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜி ஜின்பெங் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே பொழுதுபோக்கு அம்சத்தில் ஒத்துழைப்பு ஏற்பட்டு, இந்தியப் படங்கள் அதிகமாக சீனாவிலும், சீனப் படங்கள் இந்தியாவிலும் திரையிடப்பட வேண்டும் என்பது சீன அதிபரின் விருப்பம்” என்று கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டன. இந்த முறை ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்து ஆகவில்லை என்றாலும், அதற்கான முன்னேற்பாடுகளை விரிவாகப் பேசியுள்ளனர். இந்தியா – சீனா இடையே பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடையும் வகையில் இரு நாடுகளும் கவனம் செலுத்தி, ஏழ்மை, ஏற்றத்தாழ்வுகளை களைய நடவடிக்கை எடுக்க யோசித்துள்ளன. மேலும், உலக அளவிலான சுகாதாரம், பேரிடர் அபாயங்கள் போன்றவற்றிலும் தங்களது கூட்டுறவை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இவை மட்டுமல்லாமல், உலகின் மிகப் பழைமையான கலாசாரங்களுக்கு சொந்தக்காரர்களான இரு நாடுகளும், கலாசாரத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் பேசியிருப்பது வித்தியாசமான பயணத்தை நோக்கி சீனா நடைபோடுவதையே வெளிப்படுத்துகிறது.