புது தில்லி:
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி மீது கையெழுத்திட்டுக் கொடுக்கவில்லை என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
ஐ.நா. சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள வால்டோர்ப் ஆஸ்டோரியா ஓட்டலில், இந்தியாவின் சார்பில் நடத்தப்பட்ட அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விருந்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்ததாக தலைமை சமையல் கலைஞர் விகாஸ் கன்னாவை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார். அப்போது விகாஸ் கன்னா, இந்திய தேசியக் கொடியில் மோடியின் கையெழுத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அதை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு தான் வெகுமதியாகக் கொடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மோடி கையெழுத்திட்ட கொடியை விகாஸ் கன்னா ஊடகங்களுக்கும் காண்பித்தார்.
ஆனால் தேசியக் கொடி மீது பிரதமர் மோடி கையெழுத்திடவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தலைமை சமையற் கலைஞரின் மாற்றுத் திறனாளி மகள் கால் விரல்கள் மூலம் அழகிய வேலைபாட்டுடன் வடிவமைத்திருந்த ஒரு துண்டுத் துணியில்தான் பிரதமர் கையெழுத்திட்டார். அந்தத் துணியில் வெள்ளை நிறமோ, அசோகச் சக்கரமோ கிடையாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.