![]()
காத்மாண்டு: நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா இந்தியப் பிரதமர் மோடியின் டிவிட்டர் செய்தியை வைத்தே தெரிந்து கொண்டுள்ளார். அதுதான் அவர் பெற்ற முதல் தகவலாம். நேபாளத்தில் சனிக்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆகப் பதிவான மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா நேபாளத்தில் இல்லை. அவர் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேசியா சென்றிருந்தார். அவர் தனது நாட்டுக்குத் திரும்பும் வழியில் தாய்லாந்து நாட்டில் பாங்காக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெறச் சென்றார். அவர், பாங்காக் விமான நிலையத்தில் இறங்கியபோது, யதேச்சையாக தனது டிவிட்டர் கணக்கைப் பார்த்துள்ளார். அப்போது, நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து வருத்தமும் உடனடி உதவியும் செய்வதாகக் குறிப்பிட்டிருந்த பிரதமர் மோடியின் ட்வீட் இருந்ததைப் பார்த்துள்ளார். அதை அடுத்தே தன் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அவர் தெரிந்து கொண்டுள்ளார். இதனை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மகேந்திர பகதூர் பாண்டே தெரிவித்துள்ளார். சுஷில் கொய்ராலாவுடன் இந்தோனேஷியா மாநாட்டுக்குச் சென்றிருந்த பாண்டே இது குறித்துக் கூறுகையில், மோடியின் ட்வீட்டைப் பார்த்தே நாங்கள் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து அறிந்தோம். பின்னர் மேல்விவரம் கேட்டு அறிந்து கொண்டோம். பிறகு நாட்டுக்கு போன் செய்து அவ்வப்போது தகவல்களைப் பெற்றோம். நானும் மோடியின் ட்வீட்டைப் பார்த்தே அறிந்துகொண்டேன். மோடியின் உதவியை நாங்கள் மறக்க மாட்டோம். அவருக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை என்று கூறியுள்ளார். இந்தோனேஷியாவில் இருந்து சுஷில் கொய்ராலா நாடு திரும்பிக் கொண்டிருந்தபோது, நேபாள நிலநடுக்கம் குறித்தும், உதவிகள் குறித்தும் பேசுவதற்காக மோடி, அப்போது கொய்ராலாவை போனில் தொடர்பு கொள்ள அதிக நேரம் முயன்றார். ஆனால், அது முடியவில்லை,. உடனே, அமைச்சரவை அவரசக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி உதவிகளை விரைவு படுத்துவது குறித்துப் பேசினார். நேபாள பிரதமரை உடனடியாக போனில் தொடர்பு கொள்ள இயலாமல் போனதை அவர் தனது டிவிட்டரிலும் தெரிவித்திருந்தார். பின்னரே அவர் தாய்லாந்தில் இருந்த கொய்ராலாவுக்கு போன் செய்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாள் கொய்ராலா நாடு திரும்பினார்.