- Ads -
Home இந்தியா ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

புது தில்லி:

ஜல்லிக்கட்டுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்த புகார்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்தது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதை அடுத்து, இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. இது தொடர்பான அரசு அறிவிக்கையை மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் இருப்பதாக விலங்குகள் நல அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. இதை அடுத்து, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் சார்பிலும், 9 தனி நபர்கள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக மொத்தம் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மனுதாரர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் முன்வைத்த வாதத்தின் போது, “மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முற்றிலும் அலட்சியப்படுத்துவதாக உள்ளது. ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் ஆகியவை பாரம்பரியமான விளையாட்டுகள் என்றும், இந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் காளைகள் எந்த வகையிலும் கொடுமைப்படுத்தக்கூடாது என்றும் அந்த அறிவிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகள் தானாகவே ஓடுவதற்கோ அல்லது பந்தயத்தில் கலந்துகொள்வதற்கோ ஏற்றவை அல்ல என்றும், அவை வலுக்கட்டாயமாக போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் போது மிகவும் சோர்வடைகின்றன என்றும் ஏற்கெனவே தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி சட்டத்துக்கு எதிரானது. இந்தப் போட்டி மிருக வதை தடைச் சட்டத்தை மீறும் வகையில் நடத்தப்படுகிறது. எனவே, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறினார்கள்.

அவர்களுடைய வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த மனுக்கள் செவ்வாய்க்கிழமை இன்று விசாரிக்கப்படும் என்று கூறினர். அதன்படி, இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version