ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன்? என்று ஆந்திர உயர் நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. ஆந்திர வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு வெள்ளிக் கிழமை இன்று ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சம்பவம் நடந்து 17 நாட்கள் கடந்தும் இதுவரை ஏன் யாரையும் கைது செய்யவில்லை என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கில் ஆந்திர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நீதிமன்றம் கேட்டபோது, வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்துள்ளதாகவும் இதில் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இது தொடர்பாக எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்ப, அரசு வழக்கறிஞர் பதில் அளிக்கத் திணறினார். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கூறியும் இதுவரை ஏன் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். வரும் 28 ஆம் தேதிக்குள் விசாரணை தொடர்பான ஆவணங்களை கண்டிப்பாகத் தாக்கல் செய்யவேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வரும் திங்கட்கிழமைக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.