குங்குமம் எப்படிச் செய்வது என்பதற்கு ஒருமுறை காஞ்சி பெரியவர்களே கொடுத்த குறிப்பு:
1. முப்பது தோலா கெட்டியான உருண்டை மஞ்சள் எடுத்துச் சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்க.
2. இதற்கு ஸம எடை எலுமிச்சம் பழச்சாறு விதையில்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்க. மஞ்சள் முதலியன கடையில் தோலாக் கணக்கில் எடைபோட்டு வாங்குவதுபோல், எலுமிச்சஞ் சாற்றுக்கு வீட்டில் எடை பார்ப்பது முடியாது. அதனால் முகத்தல் அளவையில் வீட்டில் இருக்கக்கூடிய அவுன்ஸ் க்ளாஸில் அளந்து போடுகிற விதத்தில் சொன்னால், பதினாறு அவுன்ஸ் எலுமிச்சம் பழச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. இந்தப் பழச்சாற்றில் நன்றாகப் பொடித்த வெங்காரமும் படிக்காரமும் ஒவ்வொன்றும் மூன்று தோலா போட்டுக் கரைக்கவும்.
4. மஞ்சள் துண்டங்களை இதில் போட்டுக் கலக்கிக் கொள்ளவும். வாயகன்ற, ஈயம் பூசிய பாத்திரத்தில் வைப்பது உத்தமம்.
5. இதை ஒருநாளில் மூன்று தடவை நன்றாகக் கிளறவும். பழச்சாறு மஞ்சளில் சேர்ந்து சுண்டியபிறகு நிழலிலேயே நன்றாகக் காய வைக்கவும்.
6. அப்பறம் உரலில் இடித்து வஸ்திராயணம் செய்யவும். (மெல்லிய துணியில் பொடி.யை வடிக்கட்டுவதே வஸ்திராயணம் அல்லது வஸ்திரகாயம்.)
7. இப்படி விழுகிற சுத்தமான மஞ்சட் குங்குமத்தை வாயகன்ற ஜாடியில் பத்திரப்படுத்தவும்.
8. குங்குமத்தில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி (tea-spoon) சுத்த பசு நெய்விட்டு, கட்டி தட்டாமல், நன்றாகக் கலக்கச் செய்து வைத்தால் காப்பும் ( preservative) ஆகும்;புனிதமும் ஆகும். சுத்தமான பசுநெய் கிடைத்தால் மட்டுமே சேர்க்கவும். சரக்கைப்பற்றிக் கொஞ்சம் ஸந்தேஹமிருந்தால்கூட நெய்யே சேர்க்காவிட்டாலும் பாதகமில்லை.
https://www.kamakoti.org/tamil/3dKK51.htm