காவல்துறை வாகனத்தை வழிமறித்து தாக்குதல்-ஜெயில் கைதி சரமாரியாக வெட்டி படுகொலை
_நெல்லை பாளையங்கோட்டை அருகே, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவரை, போலீசார் மீது மிளகாய் பொடி கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, 13 பேர் கொண்ட மர்ம கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது._
_நெல்லை மாவட்டம் பழையகாயல் அடுத்த புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர், சிங்காரம் என்கிற சிங்காரவேல். இவர், சுத்தமல்லி மதன் கொலை வழக்கு மற்றும் சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் கொலை வழக்கு என, பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர். பசுபதிபாண்டியன் ஆதரவாளரான சிங்காரவேல், தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்._
_இன்று இவரை வழக்கு ஒன்றுக்காக, ஆயுதப்படை எஸ்.ஐ வீரபாகு உள்ளிட்ட 4 போலீஸார், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் ஏற்றி, தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர்களது வாகனம், நெல்லை கேடிசி நகர் செக் போஸ்ட் அருகே சென்றபோது, 13 பேர் கொண்ட மர்ம நபர்கள் திடீரென வாகனத்தை மறித்து, போலீஸார் மீது மிளகாய் பொடி கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் நிலைகுலைந்த நேரத்தில், வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல், போலீஸார் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து, அதை செயல்படாதவண்ணம் உடைத்துள்ளனர். பின்னர், உள்ளே இருந்த கைதி சிங்காரத்தை வெளியே இழுத்துப் போட்டு, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அடங்கிய சிங்காரம் உயிரிழந்துவிட்டதாக கருதிய மர்ம கும்பல், அங்கிருந்து சாவகாசமாக தப்பியோடிவிட்டது._
_ஆனால், சிங்காரம் உயிரோடு இருப்பதை கண்ட பொதுமக்களும் போலீஸாரும், அவரை தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், பாளையங்க்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்._ _
தகவல் அறிந்த நெல்லை மாநகர காவல் ஆணையர் திருஞானம், தாக்குதல் நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள், சுபாஷ் பண்ணையாரின் ஆட்களாக இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீஸார், அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்._
_துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், காவல்துறை வாகனத்தில் இருந்த கைதியை, போலீஸாரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் கொலை செய்த நிகழ்வு, நெல்லை மட்டுமல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது._