எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது நான் தான் மீட்டு கொண்டு வந்தேன் என நடராஜன் பேசினார்.
மறைந்த ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழா, அ.தி.மு.க-வினரால் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாப்பட்டுவருகிறது. தஞ்சாவூரில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா நாட்டு மக்களுக்காக வாழ்ந்து இறந்து விட்டார். யானை இறந்து விட்டால் ஈ, எறும்புகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள். ஆலமரம் விழுந்து விட்டது. அப்போது அவரை பார்க்காத, திட்டி, எட்டி உதைத்தவர்கள், தலை முடியை பிடித்து இழுத்தவர்கள், உதவாதவர்கள் தற்போது முன்னே வருவதை தமிழகம் பார்த்து கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியது போல் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வர வேண்டும்.
எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது நான் தான் மீட்டு கொண்டு வந்தேன். எனவே அனைவரும் ஒன்று பட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியை பின்பற்ற வேண்டும். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.,இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி செய்கிறார்கள். ஜெயலலிதா புகழ் இருக்கும் வரை யாராலும், அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தை அசைக்க முடியாது.
சட்டசபையில் எம்.ஜி.ஆரை வெளியேற்றியவர்கள், செருப்பால் அடித்தவர்கள் இன்று சபாநாயகரை தாக்க பார்க்கிறார்கள். அவர்கள் கோட்டையை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொள்கையை விட்டு விட்டார்கள்.
மறு தேர்தல் நடத்தும் படி ஜனாதிபதியிடம் மனு கொடுத்து உள்ளனர். நான் எந்த பதவிக்கும் வர மாட்டேன். வெளியே தான் இருப்பேன். வெளியில் இருந்து செய்ய வேண்டியதை செய்து காட்டுவேன். தமிழகம் நமது கையை விட்டு போகாது. இவ்வாறு ம. நடராஜன் பேசினார்.