குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, பெங்களூருவில் நடந்த பேரணியில், மேடை ஏறி, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என, முழக்கமிட்ட இளம் பெண் அமுல்யாவின் தந்தை தனது மகள் அடையாளம் தெரியாத ஒரு இஸ்லாமிய இளைஞரின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதாகவும், அதனால் அவள் தன் பேச்சைக் கேட்பதில்லை என்றும் கூறி, அவளது செய்கைக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
‘திப்புசுல்தான் யுனைடெட் பிரண்ட்’ என்ற அமைப்பு பெங்களூரு சுதந்திர பூங்கா அருகில் நேற்று மாலை குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்தியது. கூட்டம் தொடங்கியதும், இளம்பெண் அமுல்யா லியோனா ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என மூன்று முறை கோஷம் எழுப்பினார். அப்போதுதான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேடை ஏறிய ஐதராபாத் தொகுதி எம்.பி., ஒவைஸி இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவராக அந்தப் பெண்ணை கோஷம் போடுவதை நிறுத்தச் சொன்னார். அதே நேரம் போலீஸ் உயரதிகாரிகளும் அந்தப் பெண்ணிடம் இருந்து மைக்கைப் பிடுங்கி, பேச்சை நிறுத்தும்படி கூறினர்.
தொடர்ந்து அந்தப் பெண்ணை போலீசார் உப்பார்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அந்த விசாரணையில் அண்ணசிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவை சேர்ந்த அமுல்யா லியோனாதான் அவர் என்பதும், பெங்களூரு என்.எம்.கே.ஆர்.வி., கல்லுாரியில் பி.ஏ., இதழியல் படித்து வருவதும் தெரிந்தது.
மேலும், அந்தப் பெண் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாட்டுக்கு எதிராக பேசியது தெரிய வந்தது. தற்போது, அந்தப் பெண் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, அந்தப் பெண்ணின் தந்தை இது குறித்துக் கூறிய போது, முஸ்லிம்களுடன் சேர்ந்து போராட்டத்துக்குச் செல்லும்போதே தாம் அவளை கண்டித்ததாகவும் ஆனால் அவள் கேட்கவில்லை என்றும், தம் மகளை இவ்வாறு போராட்டங்களுக்கு அழைத்துச் செல்வதன் பின்னணியில் அடையாளம் தெரியாத ஓர் இளைஞன் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தாம் அவளை ஜாமினில் எடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுடன் சேர்ந்ததே அவள் திசை மாறக் காரணம் என்றும் கூறியுள்ளார்.