அனில் கும்ப்ளேயின் முடிவை மதிக்கிறேன் என்று தனது மௌனத்தைக் கலைத்து வாய் திறந்துள்ளார் விராட் கோலி. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்பிளே விலகினார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் விராட் கோலி முதல்முறையாக மௌனம் கலைத்து பதில் அளித்துள்ளார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் போட்டிகளில் பங்கேற்கச் சென்றுள்ள கோலி, செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது,
கும்ப்ளே சில விஷயங்களை பொதுப்படையாகக் கூறி, தன் கருத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். அவரது முடிவை நாம் மதிக்க வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரர் என்ற முறையில் கும்ப்ளே மீது நான் மரியாதை கொண்டிருக்கிறேன். நாட்டுக்காக அவர் செய்த சாதனைகளை எவரும் பறித்துவிட முடியாது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முடிந்ததும் கும்ப்ளே ராஜினாமா செய்துள்ளார். வீரர்களின் ஓய்வறையில் எது நடந்தாலும் அது நமக்குள் இருக்க வேண்டும். அவற்றை வெளியில் கசிய விடக் கூடாது என்ற கலாசாரத்தை உருவாக்கி கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகிறோம். எனவே எங்கள் அறையில் நடக்கும் விஷயங்களை வெளிப்படையாகக் கூற முடியாது என்று கூறினார்.