சென்னை:
நானும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டவன் தான் என்று கூறினார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு.
சென்னையில் மோடி தலைமையிலான மத்திய அரசின் மூன்று ஆண்டு சாதனை விளக்கக் கருத்தரங்கம், ஜிஎஸ்டி விளக்கக் கூட்டம் கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய வெங்கய்ய நாயுடு, இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், 113.26 கோடி மக்கள் ஆதார் பதிவு செய்துள்ளனர். ஆதார் உங்களுக்கான அடையாள அட்டை தான். எனவே ஆதார் நம் உரிமை என நீங்கள் நினைக்க வேண்டும்.
நானும் சிறு வயதில் இந்தி எதிர்ப்புக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். ஆனால் பின்னாளில் தில்லிக்குச் சென்ற பின்னர் அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ் என அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள். அதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் உங்கள் தாய்மொழியில் புலமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். மத்திய அரசு இந்தியை நம்மிடம் திணிக்கவில்லை. நம்முடைய தொடர்பு மொழி அது. அதனைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக சிலர் எதிர்ப்பது ஏன் என தெரியவில்லை” என்று பேசினார்.