- Ads -
Home சற்றுமுன் “இப்போ, பசி அடங்கிடுத்தா?”—பெரியவா ‘நான் உன்னை ஏமாற்றிவிட்டேன்!’ என்ற எக்களிப்பு இல்லாத, என்ன இயல்பான வார்த்தைகள்!

“இப்போ, பசி அடங்கிடுத்தா?”—பெரியவா ‘நான் உன்னை ஏமாற்றிவிட்டேன்!’ என்ற எக்களிப்பு இல்லாத, என்ன இயல்பான வார்த்தைகள்!

13177252 1079776085415638 5725058455813835410 n

“இப்போ, பசி அடங்கிடுத்தா?”—பெரியவா
(‘நான் உன்னை ஏமாற்றிவிட்டேன்!’ என்ற எக்களிப்பு
இல்லாத, என்ன இயல்பான வார்த்தைகள்!)

(தொண்டரை சாப்பிட வைத்த பெரியவாளின் கருணை)

சொன்னவர்-இந்துவாசன் வாலாஜாபேட்டை.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பெரியவாளின் சல்லாபங்களும்,ஏச்சுக்களும், சிலேடைகளும் ரசிக்கும்படியாக
இருக்கும். யாரையும் காயப்படுத்தாது.

என்னை தித்துவாய் என்றும்,ரிக்‌ஷா ஓட்டி என்றும்
அழைப்பார்கள் செல்லமாக.

மீரஜ் நகருக்கு அருகிலுள்ள விநாயகர் கோயிலில்
தங்கியிருந்தோம். அடுத்ததாகத் தங்குமிடத்துக்குச் சென்று
இடவசதி பார்த்துவிட்டு வரும்படி எனக்கு உத்தரவு.

அந்த உத்தரவை நிறைவேற்றி விட்டு,நான் அப்போது தான்
விநாயகர் கோயிலுக்குள் நுழைந்தேன். ஸ்நானம்
செய்துவிட்டு, ஸ்ரீகண்டன் மாமாவைப் பார்த்தேன்.

“நேத்திக்கு ராத்திரியிலேர்ந்து பச்சைத் தண்ணீர் கூடக்
குடிக்கல்லே பெரியவா. பால் – பழம் தொடமாட்டேங்கிறா.
நாங்கள் கெஞ்சிப் பார்த்துட்டோம்.பயனில்லே.
நீ சின்னப் பையன், நீ கேட்டால், பெரியவா சம்மதப்படுவா.”

நான் பெரியவாளுக்கு வந்தனம் செய்துவிட்டு,நான் போயிருந்த
இடத்தில் அன்பர்கள் கொடுத்த பழங்களைச் சமர்ப்பித்தேன்.

“நீ சாப்பிட்டாச்சா?…” – பெரியவா

இல்லை என்று தலையை ஆட்டினேன்.

“நீ போய் சாப்டுட்டு வா…” – பெரியவா

இதுதான் ஸ்ரீகண்டன் மாமா கூறிய விஷயத்தைக் கூறுவதற்கு
நல்ல சந்தர்ப்பம் என்ற எண்ணம் வந்தது.

“பெரியவா பிக்ஷை செய்த பிறகு சாப்பிடறேன்.

பெரியவர்கள் வற்புறுத்தவே,”நான் அப்புறம் சாப்பிடுகிறேன்”
என்று சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன்.

ஐந்து நிமிஷத்துக்குப் பின் பெரியவாளிடமிருந்து
அழைப்பு. சென்றேன்.

பெரியவா முன்னிலையில் குவிந்திருந்த பழங்களை
வகைக்கு ஒன்றாக எடுக்கச் சொன்னார்கள். எடுத்துக்
கொடுத்தேன். ஒவ்வொரு பழத்திலும் பாதியை எடுத்து
(தன் கையினாலேயே) என்னிடம் கொடுத்து ருசி பார்க்கச்
சொன்னார்கள். புளிக்காத பழமாகத் தான் எடுத்துக்
கொள்ளலாம் என்று பெரியவா நினைக்கிறார்கள் என்று
எண்ணி, நானும் வாங்கி வாங்கி சாப்பிட்டேன்.

பெரியவா,ஒவ்வொரு பழத்தின் ருசியைக் கேட்டார்கள்.
சொன்னேன்.

“இப்போ, பசி அடங்கிடுத்தா?”—பெரியவா

‘நான் உன்னை ஏமாற்றிவிட்டேன்!’ என்ற எக்களிப்பு
இல்லாத, என்ன இயல்பான வார்த்தைகள்!

எனக்கு அழுகையே வந்துவிட்டது.

என் அம்மா ஞாபகம் தான் வந்தது. நான் பசி தாங்க
மாட்டேன் என்பதால், நேரம் தவறாமல் வீட்டில்
என் அம்மா சாதம் போடுவாள்.

தொண்டை அடைக்க, ஸ்ரீகண்டன் மாமாவின்
வருத்தத்தைச் சொன்னேன்.

“நேத்திக்கு ஞாயிற்றுக்கிழமை, ராத்திரி பால் – பழம்
சாப்பிட்டு விட்டேன்.அதற்குப் பிராயச்சித்தமாகத்தான்
இப்போது பிக்ஷை பண்ணாமல் இருக்கேன்.இன்னிக்குப்
பிரதோஷம். பிரதோஷ பூஜை பண்ணிட்டு பிக்ஷை
பண்ணிக்கிறேன்….”-பெரியவா.

என்னை ஒரு பொருட்டாக மதித்துப் பதில் சொன்னதை
நினைத்து கர்வப்படுவதா? இல்லை, ஒரு சிறு
தோஷத்துக்காக, தனக்குத்தானே பிராயச்சித்தம் செய்து
கொள்ள முடிவு செய்ததை எண்ணி மனம் உர்குவதா?-
என்றே எனக்குப் புரியவில்லை.

(ஞாயிற்றுக்கிழமை இரவு உபவாசம் இருக்க வேண்டும்
என்பது சாஸ்திர விதி. அதனால் அன்றைய தினம் சூரிய
அஸ்தமனத்துக்கு முன்னதாகவே ஏதேனும் ஆகாரம்
உட்கொண்டு விடுவது, ஸ்ரீமடத்து நடைமுறை. ஞாயிறு
இரவு சமையற்கட்டில் வேலையே இருக்காது.! இதை
ஒட்டித்தான்,பெரியவா,முன்னே சொன்னபடி எனக்கு
அறிவுறுத்தினார்கள்.)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version