ஆக.4ல் கல்லூரி நிர்வாக வங்கிக் கணக்கில் ரூ.1.86 கோடி இருந்தது. அன்று மாநில அரசு ரூ.2 கோடி கல்லூரி நிர்வாகத்துக்கு விடுவிடுத்துள்ளது.
ஆக்சிஜன் வழங்கும் நிறுவனத்துக்கு 40 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டும், ரூ.68 லட்சம் நிலுவைத் தொகையை கமிஷன் தகராறு காரணமாக நிர்வாகம் வழங்காமல் இழுத்தடித்தது.
பில் தொகை வழங்கப் படாததால் ஆக.10 ல் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப் பட்டுள்ளது.
ஆக்சிஜன் இன்மையால் உயிரிழப்புகள் என்று தகவல் பரவ, ஆக.11ல் நிறுவனத்துக்கு தொகை மருத்துவக் கல்லூரியால் வழங்கப் பட்டுள்ளது.
தொகை கிடைத்ததும் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது.
2014-16-ல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டில் அந்த மருத்துவமனையில் தினமும் சராசரியாக 22 முதல் 19 குழந்தைகள் இறந்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் 11 நாட்களில் தினமும் சராசரியாக 10 குழந்தைகள் இறந்துள்ளன என்று ஒரு புள்ளி விவரம் அளித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் மாநில சுகாதார அமைச்சர்.
அந்த மருத்துவமனை ரெகார்டுகளின் படி,
ஆகஸ்ட் மாத நோய் சீசனில்,
2012ல் 557,
2013ல் 650,
2014ல் 525,
2015ல் 491,
2016ல் 641 என உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
இந்த வருடம் ஆக.11 வரை 163 பேர் இறந்துள்ளனர்.
ஆக.12-ஆம் தேதியில் இருந்து 14 வரை, 3 நாட்களில் இங்கே மூளை அழற்சி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 6 குழந்தைகள் இறந்துள்ளன. இதே காலகட்டத்தில் 21 புதிய நோயாளிகள் இங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது கோரக்பூர் மருத்துவமனையில் மூளை அழற்சி நோய்க்காக மொத்தம் 75 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்தகையை நிகழ்வுகளின் பின்னணியில் நமது சிந்தனைகள்…
மருத்துவத் துறையில் கமிஷன்கள் புரையோடிப் போயுள்ளது!
தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மருத்துவர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகங்களுக்கும் மாபெரும் ஊழல் நெட்வொர்க் உள்ளது. நம் மாநில அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும் இந்த லிஸ்டில் வருபவர்தான் என்பதை அண்மைக்கால சோதனைகள் எடுத்துக் காட்டியுள்ளன.
டாக்டர் படிப்பு ஏன் இவ்வளவு செலவு ஆகிறது? மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற கோடிக்கணக்கில் பணம் அளிக்க வேண்டிய கட்டாயம் என்ன?
வேந்தர் மூவீஸ் மதன், எஸ்.ஆர்.எம். கல்லூரி நிர்வாகம், திருவாளர் பாரிவேந்தர் என அண்மைக்காலத்தில் அடிபட்ட செய்திகளின் மொத்தக் கரு – மருத்துவ உயர் படிப்பு இடத்துக்கான தொகை, கமிஷன், முறைகேடுகள்…
மருத்துவப் படிப்பையும் மற்ற படிப்புகள் போல், கமிஷன் கொடுத்து தகுதியில்லாதவர்களும் சேர்ந்து மருத்துவர் ஆவதும்,
படிப்பு வாசனையற்ற, மருத்துவக் கல்வியின் நுணுக்கங்களை, இயல்பை, பொறுமையை, தன்மையை, குணத்தை கொண்டிருக்காதவர்களும் கமிஷன் கொடுத்து இடத்தைப் பெற்று வருவதும், கமிஷன் கொடுத்து அரசுப் பொது மருத்துவமனைகளில் சேர்வதும்…
மொத்தத்தில்….
நம் நாட்டில் சிஸ்டமே சரியில்லை!
யோகி செய்த தவறு…
ஜெபானீஸ் என்சிபாலிடிஸ் சுகாதாரக்குறைபாட்டால் வரும் நோய் குறித்து, தொகுதி எம்.பி., என்ற முறையில் பல முறை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார் யோகி. இந்த நோயின் தீவிரத் தன்மை குறித்தும், பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழும் அளவுகடந்த இறப்புகள் குறித்தும், சுகாதாரக் குறைபாடுகள் குறித்தும், நாடாளுமன்றத்தில் அடிக்கடி பேசியுள்ளார் யோகி.
இதன் காரணமாகவே கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று 2014ல் தீவிரமாகக் குரல் கொடுத்துள்ளார்.
இந்தப் பிரச்னையில் அப்போதைய மாநில அரசின் கவனத்தைக் கவர, 2013ல் ஒரு பேரணியும் நடத்தியுள்ளார்.
2011ல் நாடாளுமன்றத்தில் இந்நோய் குறித்து பேசியுள்ளார்..தன் தொகுதி சுகாதாரப் பணிகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
தான் முதல்வர் பொறுப்புக்கு வந்த முதல் 3 மாதங்களில் தன் தொகுதியில் இதுகுறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளார். மாநிலத்தில் 88 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஏற்பாடுசெய்துள்ளார். 2017 மே 25 ஆம் தேதி பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு, இந்த நோய்த் தாக்கத்தில் இருந்து விடுபட தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
எனவே கடந்த காலங்களைப் போன்றே இந்த ஆண்டும் இந்த நோய்த் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்த்து மருத்துவமனையில் அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்திருக்க வேண்டும்.
மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் ஓட்டைகள் குறித்து தமது தொகுதி என்ற வகையில் அவர் அறிந்திருக்க வேண்டும்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை முன்னிலைப்படுத்தி, நிர்வாகத்தின் கறைபடிந்த நபர்களை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும்.
க்ளீன் இண்டியா, சுவஸ்ச பாரத் என்று தெருவைக் கூட்டிச் சுத்தம் செய்வதுடன், மருத்துவமனை நிர்வாகம், ஊழல் கறை படிந்த நபர்களை புகார்களின் அடிப்படையில் விசாரித்து உண்மைத் தன்மையை அறிந்து களை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால்… இத்தனை நிகழ்ந்த பின், இப்போதாவது இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் எடுப்பார் என்று எதிர்பார்ப்பொம்.
மருத்துவமனைகளுக்கு மருந்து சப்ளை செய்யும் நிறுவனங்களையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும், அல்லது அவற்றை முற்றிலும் தவிர்த்து, அரசு சார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களையே அமைக்கலாம் அல்லது ஊக்கப்படுத்தலாம்!